"பச்சை சுயநலம்" சிலுவம்பாளையம் அதிகார பித்தர்.. ஓபிஎஸ் தலைமையில் ஒன்றிணைவோம்.. மருது அழகுராஜ் அதிரடி
ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய தனது பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார் என்று ஓபிஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டி உள்ளார்.. அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைவரு ஒன்றுசேரீர் என்றும் தொண்டர்களுக்கு மருது அழகுராஜ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கட்சி எம்எல்ஏக்கள் 66 பேரில் 63 பேர், எம்பிக்கள் 5 பேரில் 4 பேர், பொதுக்குழு 2600, மா.செ.க்களில் 99 சதவீதம் எடப்பாடி கையில் உள்ளதாக தகவல்கள் பரபரத்து வந்த நிலையில், அதிமுகவே எடப்பாடி பக்கம் சென்றுவிட்டது, ஓபிஎஸ் பக்கம் யாருமே இல்லை என்ற செய்திகளும் கடந்த 2 மாத காலமாகவே மீடியாவை ஆக்கிரமித்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவுகள் கட்சிக்குள் நிறைய உள்ளதாக சொல்லப்பட்டு வரும் அதேசமயம், ஓபிஎஸ் மீதான நியாயங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.

புழல் ஜெயில்
அந்தவகையில், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியும் புழலுக்கும், ஓ.பன்னீர்செல்வம் புனித ஜார்ஜ் கோட்டைக்கும் செல்லும் காலம் உருவாகும் என்று விடாமல் சொல்லி கொண்டிருக்கிறார்.. இந்நிலையில், ஒரு கடிதம் ஒன்றையும் தொண்டர்களுக்கு மருது அழகுராஜ் எழுதியுள்ளார்.. அந்த கடிதத்தில் உள்ளதாவது:

சர்வாதிகாரம்
"அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்னும் கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மாற்றவே கூடாத அடிப்படை விதியை தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றி தொண்டர்களை புறந்தள்ளி விட்டு ஜனநாயகத்திற்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி தனது கத்தை பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார். இதற்காக புரட்சித்தலைவியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியை தூக்கி வீசுகிறார்.

கெட்ட வார்த்தை
புரட்சித்தலைவியால் நேசிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்ட மூத்த முன்னோடிகளை நீக்குகிறேன் என்கிறார். ஒரு தொண்டன் கூட தலைமைக்கு போட்டியிடலாம் என்னும் மக்கள் திலகத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாறாக, தலைமைக்கு போட்டியிட பத்து மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், பத்து மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், கூடவே ஐந்தாண்டு காலம் தலைமைக் கழக பதவியில் இருந்திருக்க வேண்டும் என்றெல்லாம் தனக்கு உகந்தாற் போல் விதிகளை திருத்தி வாங்கும் சக்தி படைத்த, தான் மட்டுமே அண்ணா திமுகவை ஆட்டிப் படைக்க வேண்டுமென அதிகாரப் பித்து பிடித்து அலைகிறார். ஒற்றுமை என்பதே கெட்ட வார்த்தை என்கிறார்.

அதிகார பித்தர்
அதிபருக்கு நிகராக தன்னை கருதிக் கொண்டு கட்சி தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்படா விட்டால் அதிமுகவையே அழித்துவிடுவேன் என்பது போல் ஆணவத்தில் ஆடுகிறார். 4800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கு முதல் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் வரை தன்னை நோக்கி அலையடிக்கும் விவகாரங்களில் இருந்து தப்பிக்க அண்ணா திமுகவின் தலைமைப் பீடம் தான் தனக்கான பதுங்கு குழி என்பதாக நினைத்துக் கொண்டு, ஒன்றரை கோடி தொண்டர்களின் உதிரத்தாலும் உழைப்பாலும் ஒப்பில்லா தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட கழகம் என்னும் கம்பீரக் கோட்டையை, அதன் பொன்விழா ஆண்டில் தன் பச்சை சுயநலத்திற்காக சாதி வாரியாக, மண்டலங்கள் வாரியாக சிதைக்க முற்படுகிறார்.

சிலுவம்பாளையம்
இப்படி தனி ஒருவரின் அதிகார வெறியால் அதிமுகவை சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணர்ந்து அதனைத் தடுக்க மனசாட்சி கொண்ட நிர்வாகிகளுடன் கழகத் தொண்டர்கள் திரள வேண்டும். ஜனநாயகம் காத்திட ஒற்றுமையை முன்னெடுக்கும் பெரியகுளத்து பெரியமனத்தார் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கழகத்தின் தொண்டர்கள் அணி திரள்வது ஒன்று தான் கட்சியை சிலுவையில் ஏற்றத் துடிக்கும் சிலுவம்பாளையத்து அதிகாரப் பித்தர் எடப்பாடியிடம் இருந்து காத்திட முடியும் என்பதை கழகத் தொண்டர்கள் உணர்ந்து, மக்கள் திலகமும் மகராசி அம்மாவும் மடியிட்டு வளர்த்த மகோனத இயக்கத்தை காப்பாற்ற அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓரணியில் திரள்வோம். அனைத்திந்திய அண்ணா திமுகவின் அவசரமும் அவசியமும் இது ஒன்று தான்" என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில் மருது அழகுராஜ் எழுதியுள்ள இந்த கடிதம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications