வேறு மதத்தினரை காதலித்து திருமணம் செய்கிறவர்கள் அறிய வேண்டியவை.. உயர்நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு
சென்னை: டேனியல் என்பவர் தன் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி மதுரை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு திருமணம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாததால், இவர்களது திருமணம் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வெளிநாட்டவர்களுடன் இந்தியர்களின் காதல் திருமணம் சட்டப்படி செல்லுமா? என்று கேள்வி எழுப்பியதுடன் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் டேனியல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கும், லட்சுமி என்பவருக்கும் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2005-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன் நான்.. என் மனைவி இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், பெற்றோர் கட்டாயப்படுத்தியால் திருமணம் செய்துக் கொண்டதாக என் மனைவி என்னிடம் கூறினார். எங்கள் திருமணம் மனைவியின் வீட்டில் நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறவில்லை. எங்களது திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை. அதனால், எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் " இவ்வாறு டேனியல் மனுவில் கூறியிருந்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை லட்சுமி திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கோர்ட்டு, சிறப்பு திருமணம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாததால், இவர்களது திருமணம் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில், லட்சுமி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்எம்டி டீக்காராமன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிடுகையில், "கல்யாண பத்திரிகையை பார்க்கும்போது, அது கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது என்று தெரியவில்லை. தேவாலயத்திலும் கல்யாணம் நடக்கவில்லை. கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு மதங்களையும், வெவ்வேறு மத நம்பிக்கைகளையும் கொண்டவர்கள். அவர்களது திருமணம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்படவில்லை. இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணத்தை சிறப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
ஏன் என்றால், இந்து திருமண சட்டத்தின் கீழ் கணவன், மனைவி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் யாராவது ஒருவர் கிறிஸ்தவராக இருந்தால், கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து வைக்கும் அதிகாரி முன்புதான் திருமணம் நடைபெற வேண்டும். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றால், அதாவது இந்துவுடன் கிறிஸ்தவரோ அல்லது இஸ்லாமியரோ என்றால் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தான் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும்.
மனுதாரர்களின் திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாததால், இவர்களது திருமணம் செல்லாது என்று தீர்ப்பை பிறப்பிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. அதனால், இவர்களது திருமணம் செல்லாது என்று கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம்.
அதேநேரம், வெளிநாட்டவர்களை நம் நாட்டைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை அடிக்கடி செய்திதாள்களின் வாயிலாக நாம் பார்க்கிறோம். இந்திய நாட்டில் உள்ள திருமணச் சட்டத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். இந்து திருமண சட்டத்தின்படி தம்பதி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இதுபோல வெளிநாட்டவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் இந்து மதத்தைச் சேராதவர்கள் என்றால், கண்டிப்பாக சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அவர்களது திருமணத்தை பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லை என்றால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications