அதிமுக 'தலையெழுத்து'.. மாற்றி எழுதத் தயாராகும் கள்ளர் சமூகத்தினர்?.. அதிரும் தென் தமிழகம்
சென்னை: சில அதிருப்திகள் காரணமாக, தமிழகத்தின் தென், மத்திய மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் கள்ளர்களால் அதிமுக வாக்கு வங்கி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சில கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த 15 நாட்களில் அவர்கள் மக்கள் முன்வைக்குப் போகும் வாக்குறுதிகளும், உறுதிமொழியும் தான் யார் ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறார்கள் என்பதை உறுதி செய்யப் போகிறது. இந்நிலையில், தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் அதிகமா வசிக்கும் கள்ளர்கள் வாக்குகள் தேர்தலில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பார்ப்போம்.
கள்ளர்கள் அதிருப்தி
குறிப்பாக, உசிலம்பட்டியில் இருக்கும் கிராமங்களில் 'மாசி பச்சை' எனும் விழா கொண்டாடுகின்றனர். அக்மார்க் பிறமலைக் கள்ளர்களின் விழா இது. இந்நாளில், குடும்பத்தில் மறைந்த முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், உசிலம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் பல வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதை விசாரிக்கும் பொழுது, இந்த கருப்பு கொடிகள், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய அறிவுப்பு குறித்து கள்ளர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சி
முக்குலத்தோர் என்பது கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய ஜாதிகளின் ஒருங்கிணைப்பாகும். முக்குலத்தோர் அல்லது தேவர் என்று அழைக்கப்படும். எம்.ஜி.ஆர். ஆட்சி முதல் ஜெ., ஆட்சி வரை முக்குலத்தோர் பெல்ட்டில் மிக வலிமையாக இருந்தது அதிமுக ஆட்சி.
கருப்பு கொடி எதிர்ப்பு
ஆனால், இப்போது தமிழகத்தை ஆளும் முதல்வர் பழனிசாமி கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். அரசியலில் இருந்து ஒதுங்கியதாக அறிவித்த விகே சசிகலா கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர். இந்த சூழலில், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் பழனிசாமிக்கு கள்ளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உருவாகி இருப்பது மறுப்பதற்கில்லை. தேர்தல் நடைபெற சில நாட்களே இருக்கும் அந்நிலையில், இப்போதே கருப்பு கொடி வாயிலாக எதிர்ப்புகள் எழத் தொடங்கிவிட்டன.
உரசல் போக்கு
அதுமட்டுமின்றி, குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை 'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால், பள்ளர்கள் மற்றும் வேளாளர்கள் இடையே ஒருவித உரசல் போக்கும் நீடிக்கிறது.
எம்பிசி பட்டியல்
116 சாதிகள் எம்பிசியின் கீழ் வருவதாக உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் "எட்டு புதிய ஜாதிகள் எம்பிசி பட்டியலில் சேர்க்கப்பட்டபோது எங்களுக்கு எதுவும் தெரியாது. இப்போது, அந்த புதிய எட்டு எம்பிசி ஜாதிகளுடன், நாங்கள் 7% இட ஒதுக்கீட்டை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இப்போது நாங்கள் (டி.என்.சி) வன்னியர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல் மற்ற எம்.பி.சி.க்களுக்கும் எதிராக போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்கின்றனர்.
பிறமலைக் கள்ளர்
கள்ளர் ஜாதியில் சுமார் 27 துணை ஜாதிகள் உள்ளன. ஆனால் இடஒதுக்கீட்டுக்காக, நாங்கள் கந்தர்வகோட்டை கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், கூத்தப்பர் கள்ளர் மற்றும் பிறமலைக் கல்லர் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டோம். முதல் மூன்று கள்ளர் குழுக்கள் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக இருந்தாலும், பிறமலைக் கல்லர்கள் பெரும்பாலும் உசிலம்பட்டியில் மட்டுமே குவிந்துள்ளனர்.
பாதிக்கலாம்
தேர்தலை பொறுத்தவரை, கள்ளர்கள் அதிமுகவின் வெற்றியை தீர்மானித்து வருகிறார்கள். அவர்களால் அரசாங்கத்தை உருவாக்கவும் முடியும், உடைக்கவும் முடியும். ஆனால் இந்த முறை, வன்னியார் இடஒதுக்கீடு, சசிகலா பின்வாங்கல் மற்றும் அகமுடயர்கள் மற்றும் மறவர்களை ஓரங்கட்டுவது போன்ற காரணங்களால் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.