பாஜகவில் அடுத்த பஞ்சாயத்து.. அதிமுகவில் இணைந்தாரா கல்யாணராமன்? அண்ணாமலையின் உறவினர் என காயத்ரி சாடல்
சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துக்கள், பேச்சுக்களின் மூலம் பெயர் பெற்ற பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மலர் கொடுது வழங்கிய புகைப்படத்தை பகிர்ந்து அவர் அதிமுகவில் இணைந்ததாக பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத் தலைவர் செல்வகுமார் தெரிவித்த கருத்துக்கு பாஜகவிலிருந்து சமீபத்தில் விலகிய நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கல்யாணராமன் பாஜகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் சிறுபான்மையினருக்கு எதிராக மத வெறுப்பை பரப்பும் கருத்துக்களை தெரிவித்ததாக இவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து உள்ளன.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் தெரிவித்த கருத்துக்களால் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்ததற்காக குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு இருக்கிறார் கல்யாணராமன்.

எடப்பாடியுடன் கல்யாணராமன் சந்திப்பு
இதற்காக இவரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்ட நிலையில் தற்போது வேறு ட்விட்டர் கணக்கில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கல்யாணராமன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுக்கும் புகைப்படம் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டது.

பாஜக நிர்வாகி ட்வீட்
பலரும் அவர் அதிமுகவில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர்கள். இந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவின் தொழிற்பிரிவு மாநில துணைத் தலைவரான செல்வகுமார் ட்விட்டரில், "அண்ணன் கல்யாணராமன் அவர்கள் அதிமுகவில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருப்பார் என நம்புகிறேன்." என பதிவிட்டார்.

கல்யாணராமன் மறுப்பு
செல்வகுமாரின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்யாணராமன் ட்விட்டரில் இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், "1978 11 வயதில் துவங்கி இன்று வரை RSS ஸ்வயம் சேவகனாக ABVP முழுநேர ஊழியனாக, விஜய பாரத எழுத்துப் பணி, சுதேசி விழிப்புணர்வு இயக்கப் பணி என பயணித்து வருகிறேன்.

கட்சி தாவவில்லை
சித்தாந்தம், லட்சியம், கொள்கை, இயக்கங்கள் மற்றும் கட்சிக்காக 100% முழு ஆத்ம திருப்தியுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணித்து வரும் லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்களில் நானும் ஒருவன். எனது மரியாதை நிமித்தமான சந்திப்புகள் அனைத்தும் எனது கட்சியின் நலனுக்காக மட்டுமே இருக்கும்! தற்போது நாளைய கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க மதுரை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்." என்று விளக்கி உள்ளார்.

காயத்ரி ரகுராம் கண்டனம்
இந்த நிலையில் பாஜகவிலிருந்து கல்யாணராமன் விலகி அதிமுகவில் இணைந்துவிட்டதாக பதிவிட்ட செல்வகுமாரை பலரும் விமர்சித்து வருகிறார்கள். பாஜகவில் இருந்து அண்மையில் வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராமும் செல்வகுமாரை விமர்சிக்கும் வகையில் வெளியான ஒரு ட்வீட்டை ரீட்வீட்டை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அண்ணாமலையின் உறவினர்
அதில், "செல்வகுமார் அண்ணாமலையின் தூரத்து உறவினர். கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்க வேண்டாம். அவருக்கு பொய்யான செய்திகளும் மற்றவர்களில் ஒருவரைப் பற்றி தவறாக பேச மட்டுமே தெரியும். பாஜகவில் இருந்து மக்களை விரட்ட மட்டுமே அவர்கள் இங்கு வந்துள்ளனர்." என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications