அல்டிமேட் திட்டம்.. எடப்பாடியை "போல்டாக்க" ஓபிஎஸ் வீச போகும் யார்க்கர்.. யார் கொடுத்த ஐடியா?
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக தனியாக பொதுக்குழுவை நடத்தும் திட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறாராம். இந்த பொதுக்குழு திட்டத்திற்கு பின் வேறு சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் கடந்த 3 நாட்களாக ஓ பன்னீர்செல்வம் அடித்து ஆட தொடங்கி உள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று ஓ பன்னீர்செல்வம் இன்னமும் கூறி வருகிறார்.
இந்த நிலையில்தான் கட்சியில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல முக்கியமான மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அறிவிப்பு
எடப்பாடி ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு, ஓ பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். எம்பி தர்மர், இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதோடு நியமனங்கள் நிற்காது.. ஓ பன்னீர்செல்வம் மேலும் சில நியமனங்களை மேற்கொள்வார் என்று அப்போதே செய்திகள் வந்தன.

நியமனங்கள்
அதன்படியே அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக புதிய உறுப்பினர்கள் சிலரை ஓ பன்னீர்செல்வம் நியமனம் செய்தார். வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரை கட்சியின் தலைமை கழக உறுப்பினர்களாக நியமனம் செய்தார். அதேபோல் வைத்தியலிங்கத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். ஓ பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்புகளுக்கு, இந்த முடிவுகளுக்கு பின் வேறு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் என்ன?
அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் வரும் நாட்களில் மேலும் நியமிக்கப்படுவார்கள். அதேபோல் தலைமை கழக நிர்வாகிகள் பலர் வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள். இணை ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டுவிட்டார். இவர்களை எல்லாம் வைத்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக தனியாக பொதுக்குழுவை நடத்தும் திட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் சென்னை வானகரத்திலேயே பொதுக்குழு நடக்கும் என்று கூறப்படுகிறது.
Recommended Video

வானகரம்
இந்த பொதுக்குழு திட்டத்திற்கு பின் வேறு சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்குழுவை நடத்தி அதில் எடப்பாடிக்கு எதிராக முடிவு எடுக்கப்படும். இதுதான் உண்மையான பொதுக்குழு என்று வாதம் வைப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடிக்கு எதிராக வாதங்களை வைத்து.. கட்சியின் சின்னத்தை முடக்க ஓ பன்னீர்செல்வம் பிளான் செய்துள்ளார் என்கிறார்கள்.

விதி
கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். நானும் - வைத்தியலிங்கமும் பொதுக்குழுவை கூட்டி எடுத்த முடிவே செல்லுபடி ஆகும் என்று வாதம் வைக்கும் திட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் இது கண்டிப்பாக குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறாராம். அதோடு.. அதிமுக விதிகள்.. தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் அனைத்தும் அறிந்த முக்கிய புள்ளி ஒருவர்தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த தொடர் ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி புள்ளி
டெல்லி - சென்னை இரண்டிலும் செல்வாக்கு கொண்ட அந்த புள்ளி போட்டுக்கொடுத்த வழியில்தான் ஓ பன்னீர்செல்வம் சென்று கொண்டு இருக்கிறார். இப்போது ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவை கூட்டும் திட்டத்தில் இருக்கிறார். இதற்கு பின்பு இருப்பதும் அந்த புள்ளிதான். மேலும் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் புதிய அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதை அதிமுக அலுவலகமாக பயன்படுத்துவார் என்று தகவல்கள்வருகின்றன .












Click it and Unblock the Notifications