வெள்ளப்பாதிப்பு அசாமில் சிவசேனா எம்எல்ஏக்களை வைத்து அரசியல் வணிகமா? பாஜகவை சாடிய சீமான்
சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும் நோக்கத்தில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களை வெள்ளப்பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் பாஜக தங்க வைத்து அரசியல் வணிகம் செய்கிறதா? என நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் பாஜகவின் இத்தகைய செயல் வெட்கக்கேடானது. மிகவும் இழிவானது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி அடைந்த சிவசேனா எம்எல்ஏக்கள் அக்கட்சியின் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் உள்ளனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.

கவுகாத்தியில் சிவசேனா எம்எல்ஏக்கள்
இந்நிலையில் தான் தற்போது அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 80க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ள நிலையில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் பாஜக சார்பில் சிவசேனா எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெட்கக்கேடு
அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் பெரும்வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 45 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அம்மாநிலமே பேரிடரில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழலில் சிவசேனா கட்சியை சேர்ந்த மராட்டிய மாநில எம்எல்ஏக்களை அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் தங்க வைத்து ஆட்சி கலைப்புக்கான முன்னெடுப்புகளைச் செய்து வரும் பாஜக ஆட்சியாளர்களின் கொடுங்கோல் செயல்பாடுகள் வெட்கக்கேடானவையாகும். வெள்ளபாதிப்புக்கு உள்ளான அசாமில் சிவசேனா எம்எல்ஏக்களை வைத்து பாஜக அரசியல் வணிகம் செய்கிறதா?

கொடுங்கோல்தனத்தின் உச்சம்
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களை பேரம்பேசி தன் பக்கம் ஈர்ப்பதும், மாநில அமைச்சரவையை சீர்குலைத்து, தனது அதிகார வலிமையை கொண்டு கலைப்பதும், மாநிலக்கட்சிகளை பிளவுப்படுத்தி, பலவீனப்படுத்துவதுமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் பாஜகவின் எதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அதுவும் வெள்ளத்தாலும், பேரழிவாலும் பாதிக்கப்பட்டு நிற்கிற அசாம் மாநிலத்தில் இத்தகையக் கேலிக்கூத்துகளை அரங்கேற்றுவது துளியும் மக்கள் நலனற்ற கொடுங்கோல்தனத்தின் உச்சமாகும்.

மிகவும் இழிவான அரசியல்
மானுடக்கூட்டம் வெள்ளப்பேரழிவில் சிக்கி, அன்றாடத்தேவைகளுக்கும், அத்தியாவசிய இருப்புகளுக்குமாக வாழ்க்கைப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் துயர்நிறைந்த அசாம் மாநிலத்தில், சிவசேனா கட்சி எம்எல்ஏக்களை தங்க வைத்து, அவர்களைக் கண்காணித்து வரும் பாஜகவின் தலைவர் பெருமக்கள் தங்களது அதிகாரப்பரவலாக்கலுக்கான லாப நட்டக்கணக்கீடுகளையும், பதவிப்பேரங்களையும், அரசியல் வணிகங்களையும் கொஞ்சமும் நாணமின்றி செய்து வருவது ஏற்கவே முடியாத மிக இழிவான அரசியலாகும்.

மனிதர்களை சாகடித்து மதம் வளர்ப்பது...
மனிதர்களைச் சாகடித்து, மதத்தை வளர்ப்பதும், குடிகளைப் பாழ்படுத்தி ஆட்சியை நிறுவுவதுமான மனிதநேயமற்ற இச்செயல்பாடுகளாலேயே, பாஜக எனும் அரசியல் இயக்கத்தையும், அதன் இந்துத்துவக் கோட்பாட்டையும் மனிதர்களுக்கு எதிரானது என எச்சரிக்கிறோம்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications