அடிக்கடி காலை வாரும் யுபிஐ.. சர்வர் டவுன் ஆனாலும் டிஜிட்டல் பேமண்ட் செய்யலாம்.. டிரிக்ஸ் இதுதான்
சென்னை: யுபிஐ செயலிகள் சமீப காலமாக அடிக்கடி டவுன் ஆவதால் பயனர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் பயனர்கள் தவிக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் கையில் காசு இல்லை என்றால் வாடிக்கையாளர்களின் நிலை அதோ கதிதான்.. ஆனால் இதுபோன்ற நேரங்களிலும் டிஜிட்டல் பேமண்ட்டுகளை செய்வதற்கான வசதி உள்ளது. இது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கடை வீதிக்கு சென்றால் பர்சில் பணம் வைத்துக்கொண்டு சென்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது என சொல்லும் அளவுக்கு பெரும்பாலானோர் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டார்கள். சாலையோர கடைகளில் இளநீர், ஜூஸ் வாங்கினால் கூட ஜிபே, போன் பே இருக்கா? எனக்கேட்டு நொடிப்போழுதில் தேவையான கட்டணத்தை செலுத்திவிட்டு செல்லும் பழக்கம் தற்போது அதிகரித்துவிட்டது.

யுபிஐ செயலி
ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இந்த யுபிஐ செயலிகள் உள்ளன. வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பரிமாற்றம் செய்ய முடிகிறது என்பதால் 10 ரூபாய் பரிவர்த்தனைக்கு கூட பலரும் கூகுள் பே செய்துவிட்டு போவதை பார்க்க முடிகிறது. குக்கிராமத்தில் உள்ள பெட்டிக்கடை முதல், சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் வணிக வளாகங்கள் வரை யுபிஐ பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்க முடியும் என்ற நிலை கிட்டத்தட்ட வந்துவிட்டது.
சொல்லப்போனால் கையில் ஒரு ரூபாய் கூட பணமாக எடுத்துச்செல்லாமல் எந்த இடத்திற்கும் சென்றுவிட்டு தேவையானதை வாங்கிவிட்டு வந்துவிடலாம். சில்லறை பிரச்சினை போன்றவை இல்லை என்பதால் வாடிக்கையாளர்களும் கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளில் பணம் செலுத்திவிட்டு செல்வதையே விரும்புகிறார்கள். ஆனால் சில நேரங்களில் இந்த யுபிஐ செயலிகள் காலை வாரிவிட்டு விடுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நாடு முழுக்க யுபிஐ செயலிகள் முடங்கின. இதனால், பொருட்களை வாங்கிவிட்டு பேமேண்டுகளை செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் திண்டாடினர். சொல்லப்போனால் ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு பில் தொகை செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் பலரும் என்ன செய்வதென்று தத்தளிக்கும் நிலை இருந்ததையும் காண முடிந்தது.
யுபிஐ டவுன் ஆன சமயத்திலும்
நாடு முழுக்க பல லட்சக்கனக்கான வாடிக்கையாளர்கள் பரி தவிப்புக்கு உள்ளாகினர். ஒரு நிமிடத்திற்கு 4,00,000 பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாக தரவுகள் சொல்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வரலாம்.. கையில் காசு இல்லாவிட்டாலும் கூட யுபிஐ டவுன் ஆன சமயத்திலும் பேமேண்ட் செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது. அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் என்பிசிஐ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக யுபிஐ லைட் என்ற வசதியை அறிமுகம் செய்தது. இந்த யுபிஐ லைட் மூலமாக ஆன்லைனில் இல்லை என்றாலும் கூட பயனாளர்களால் கட்டணம் செலுத்த முடியும். இந்த வசதி குறைந்த நெட்வொர்க் கொண்ட கிராமப்புற பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இண்டெர்நெட் இல்லாமலும் அனுப்பலாம்
அதாவது இந்த யுபிஐ லைட் என்பது டிஜிட்டல் வாலட் போல செயல்படும். ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம் வரை இதில் டாப் அப் செய்து கொள்ள முடியும். சிங்கிள் பேமண்டில் அதிகபட்சமாக ரூ. 500 செலுத்தலாம். இதற்கு முன்பாக ரூ.200 வரை செலுத்த முடியும் என்ற வசதியே இருந்தது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆகிய யுபிஐ செயலிகளில் இந்த வசதியை பயன்படுத்த முடியும். நெட்வொர்க் இல்லையென்றாலும் கூட கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து எளிதாக நீங்கள் பணம் செலுத்த முடியும்.
இண்டர்நெட் வசதி இல்லையென்றாலோ.. சர்வர் பிரச்சினை இருந்தாலும் கூட உங்களால் பேமண்டுகளை செலுத்த முடியும். நெட்வோர்க் கனெக்ஷன் வந்தவுடன், இந்த பரிவர்த்தனை பணம் பெறுவர் அக்கவுண்டிற்கு சென்று விடும். இணையவசதி அதிகம் இல்லாத பகுதிகளுக்கு இந்த யுபிஐ லைட் பெரும் வசதியாக இருக்கும். யுபிஐ பின் கூட பதிவிடாமல் பேமெண்டுகளை செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications