விஜய்யுடன் கைகோர்க்கும் காங்கிரஸ்? ராகுலுக்கு போன முக்கிய ரிப்போர்ட்! போன் பேசியதன் பின்னணி
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டிக்கு இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸிடம், தவெக ஆதரவு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் விஜயை தொடர்பு கொண்டு ராகுல் காந்தி பேசியுள்ளார். அதுமட்டுமின்றி முக்கிய ரிப்போர்ட் ராகுல் காந்திக்கு கிரிஷ் சோடங்கள் அனுப்பி வைத்துள்ளது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானாலும் கூட இன்னும் பரபரப்பு குறையவில்லை. திமுக, அதிமுக கூட்டணிகள் தோல்வியடைந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 10 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தமிழகத்தில் மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் விஜய்யிடம் 107 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். இதனால் விஜய்யின் தவெக பிற கட்சிகளிடம் ஆதரவு கோரும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு கிள்ளியூர், குளச்சல், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் ஆதரவு அளித்தால் தவெகவிற்கான ஆதரவு 112 ஆக உயரும்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தமிழக தேர்தல் நிலவரம் குறித்து மல்லிகார்ஜூன கார்கே, ராகுலிடம் அறிக்கை அளித்துள்ளேன். பெண்கள், இளைஞர்களின் ஆதரவு கிடைத்ததால் த.வெ.க அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது'' என்றார்.
இதன்மூலம் தமிழக அரசியல் கள நிலவரம் பற்றி கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியிடம் அறிக்கை அளித்து இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே தான் ராகுல் காந்தி , விஜய்க்கு போன் போட்டு பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதவிர பிற விஷயங்கள் பற்றியும் பேசியுள்ளனர்.குறிப்பாக ராகுல் காந்தியிடம், விஜய் ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ராகுல் காந்திக்கு, தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது மீண்டும் தவெக நேரடியாக காங்கிரஸிடம் ஆதரவு கோரியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் தமிழகத்தில் வலுவாக கால்பதிக்க ராகுல் காந்தி விரும்புகிறார். ஆனால் திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அவர் நினைக்கிறார். இதனால் எதிர்க்காலத்தில் தவெகவுடன் இணைந்தால் தமிழகத்தில் காங்கிரஸை வலுவாக்க முடியும் என ராகுல் காந்தி கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தவெகவிற்கு ஆதரவு குறித்து தற்போது வரை ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் மேலிடமோ எதுவும் சொல்லவில்லை.
இதற்கிடையே தான் விஜய்யிடம் பேசியது பற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க்ததில் குறிப்பிட்டுள்ளார். அதில், ''நான் விஜய்யிடம் பேசினேன். தவெகவின் இந்த அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.இன்றைய மக்களின் தீர்ப்பு புறக்கணிக்க முடியாத, புறக்கணிக்க முடியாத இளைஞர்களின் எழுச்சியை பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கும், ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாடு, புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு மற்றும் சேவைக்காக காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications