விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதாக அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தான் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குவதாக அவர் இன்று அறிவித்துள்ளார். மேலும் புதிய வேட்பாளரை அறிவித்துள்ள திருமாவளவன் போட்டியில் இருந்து விலகியது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விசிகவிற்கு மொத்தம் 6 சட்டசபை தொகுதிகளை திமுக வழங்கியது. இதில் 4 தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து இந்த முறை விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கும்படி திமுகவிடம் கூறியது. ஆனால் அதனை திமுக ஏற்காத நிலையில் 8 தொகுதிகளை வழங்கியது. அதன்படி 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் வழங்கப்பட்டன.
விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு
கடந்த 3ம் தேதி திருமாவளவன் தனது கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி திண்டிவனம் (தனி) தொகுதியில் வன்னியரசு போட்டியிடுகிறார். பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் மாலதி, செய்யூர்(தனி) தொகுதியில் சிந்தனை செல்வன், திருப்போரூரில் பன்னீர் தாஸ், பெரியகுளம் (தனி) தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம்(தனி) தொகுதியில் எழில் கரோலின் ஆகியோர் போட்டியிடுவதாக கூறினார்.
வேட்பாளரானார் திருமாவளவன்
மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தானே போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார். ஏதிருமாளவன் சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். அதோடு இந்த காட்டுமன்னார் கோவில் எம்எல்ஏவாக விசிகவின் சிந்தனை செல்வன் உள்ளார். அவருக்கு பதில் திருமாவளவன் களமிறங்குவதாக தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யாத திருமா
திருமாவளவனின் இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக எப்போதும் அறிவிக்கவில்லை. திடீரென்று அவர் தன்னை தானே வேட்பாளராக அறிவித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால் திருமாவளவனின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது. அவர் இன்னும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் நாளை மறுநாளுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கலுக்கு நாளை மறுநாள் மட்டுமே உள்ளது.
விலகுவதாக அறிவித்த திருமாவளவன்
இப்படியான சூழலில் தான் விசிகவின் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் இருந்து பின்வாங்குவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் இன்று மாலையில் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது காட்டுமன்னார் கோவில் தொகுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுபற்றி திருமாவளவன் கூறியதாவது:
பதவியில் பிடிப்பு இல்லை
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட விரும்பினேன். எனக்கு எம்பி பதவி இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. என்றாலும் சட்டபேரவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய உள்ளுணர்வு நான் சட்டபேரவையில் இருக்க வேண்டும் என்று சொன்னது. சட்டபேரவையில் விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை பேச வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாகவே எண்ணம் இருந்தது. இது நீண்டநாள் கனவு. 2001ம் ஆண்டில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு உதயசூரியன் சின்னத்தில் வென்று இரண்டரை ஆண்டு எம்எல்ஏவாக இருந்தேன். பதவியில் ஈடுபாடு இல்லை. பிடிப்பும் இல்லை. இதனால் ராஜினாமா செய்தேன்.
கூட்டணி நலனுக்கு பாதிப்பு
அப்படி இருக்கும்போது சட்டமன்றத்திலும் இருப்பது நல்லது என்று கூறினேன். என்னை வந்து யாரும் கட்டளையிட்டு வேலை வாங்க முடியாது. அது எந்த காலத்திலும் நடக்காது. போட்டியிடுவதாக அறிவித்த 6 நாட்களில் 5 நாளில் திருமாவளவன் உள்நோக்கத்துடன் சட்டசபைக்கு செல்ல இருப்பதாக எங்களின் கூட்டணி நலன் பாதிக்கப்படக் கூடிய வகையில் கருத்து பரப்பல் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்பது எனக்கு கிடையாது. யுத்த களத்தில் முன்னோக்கி செல்வது போல் பின்நோக்கி செல்வதும் ராஜதந்திரம் தான்.
புதிய வேட்பாளர் அறிவிப்பு
ஊடகங்களில் நடத்தப்பட்ட விவாதங்களும், திட்டமிட்டு விசிகவிற்கு எதிராக பரப்பப்பட்ட அவதூறுகளும் என்னுடைய நோக்கதை கொச்சைப்படுத்தி உள்ளன. துணை முதல்வர் பதவிக்காக நான் திட்டமிட்டு போட்டியிடுவதாக பரப்புகிறார்கள். பதவிக்காக நான் போகவில்லை. கூட்டணி ஆட்சியை நான் கோரமாட்டேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேன்.
ஆனாலும், என்னுடைய நோக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கூட்டணிக்கு எதிராக கருத்து பரப்புகின்றனர். இந்த அவதூறுகளை முறியடிக்க வேண்டியது அவசியம். இப்போது என் நிலைப்பாட்டை தள்ளிவைக்கிறேன். நான் எனது யுக்தியை மாற்றி வைக்கிறேன். நான் போட்டியிடுவதாக அறிவித்த தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications