ஜெனீவாவில் கூடிய பெரிய தலைகள்.. ஆட்டம்காணும் தங்கம், கச்சா எண்ணெய் விலை!
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கம் இடையே நீடித்து வந்த போர், அமெரிக்காவின் தலையீடு காரணமாக இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இடைக்கால அமைதி முயற்சியை நிரந்தர அமைதியாக மாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால், ஜெனீவாவில் அமெரிக்காவும் ஈரானும் இடையே நடைபெறவிருக்கும் முக்கிய பேச்சுவார்த்தைக்கு வழி திறந்துள்ளது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த இஸ்ரேல் தாக்குதல்களில் குறைந்தது 47 பேர் உயிரிழந்த பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் பரந்த அளவிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய அடியாக பார்க்கப்படுகிறது. லெபனான் அதிபர் ஜோசப் அவுன், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தாலும், முழுமையான போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் தொடரும் என்று தெரிவித்தார்.
ஜெனீவாவில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.
ஈரான், அமெரிக்கா மத்தியிலான போர் நிறுத்த பேச்சுவாத்தை மட்டும் அல்லாமல் ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்த நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் நடைபெறுகிறது. ஆனால், இஸ்ரேல் ஒப்பந்த விதிகளை கடைப்பிடிப்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா?
இந்த பேச்சுவார்த்தைகள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை குறைப்பதோடு, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகளும் இந்த பேச்சுவார்த்தையில் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது பயணத்தை ரத்து செய்திருந்தார். லெபனானில் மீண்டும் எழுந்த பதற்றம் காரணமாக இந்த பேச்சுவார்த்தை நிச்சயமற்ற நிலையில் இருந்தது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வாஷிங்டனில்
அமெரிக்க வெளியுறவுத்துறை, ஜூன் 23 முதல் 25 வரை வாஷிங்டனில் இஸ்ரேல் - லெபனான் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவது மற்றும் லெபனானை முழு இறையாண்மை கொண்ட நாடாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள், மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நடைபெறவிருக்கும் ஜெனீவா பேச்சுவார்த்தை எப்படி முடிவுக்கு வரும் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
தங்கம், கச்சா எண்ணெய் விலை!
இதன் எதிரொலியாக WTI கச்சா எண்ணெய் விலை 0.91 சதவீதம் அதிகரித்து 76.54 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.90 சதவீதம் அதிகரித்து 80.57 டாலராகவும் உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் விலை சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1.18 சதவீதம் குறைந்து 4160 டாலர் அளவுக்கு சரிந்துள்ளது. இந்த வாரம் 4350 டாலர் வரையில் உயர்ந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் போர் தாக்குதல் காரணமாக மீண்டும் சரிந்துள்ளது.
ஈரான் போரில் நிரந்தர தீர்வு காணும் வரையில் இது தொடரும்.












Click it and Unblock the Notifications