ஐடி ஊழியர்களுக்கு ‛ஜாக்பாட்'.. புதிய தொழிலாளர் சட்டத்தால் என்னென்ன பலன்.. சம்பள தேதி இனி இதுதான்
சென்னை: நம் நாட்டில் மத்திய அரசு கடந்த 21ம் தேதி 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை அமல்படுத்தி உள்ளது. இதன்மூலம் கூடுதல் நேர பணிக்கு இரட்டை சம்பளம், ஓராண்டு நிறுவனத்தில் பணியாற்றினாலே கிராசூவிட்டி தொகை வழங்குவது உள்பட பல்வேறு அம்சங்களை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தான் இந்த தொழிலாளர் சட்டத்தால் ஐடி ஊழியர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொழிலாளர்களின் நலன் கருதி 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ( (New Labour Code) கொண்டு வந்துள்ளது. கடந்த 21ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

அதாவது தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 உள்ளிட்டவை தான் அந்த புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளாகும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி இது அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து துறை தொழிலாளர்களுக்கும் பல்வேறு நலன்களை உறுதி செய்ய உள்ளது.
அந்த வகையில் 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பால் ஐடி ஊழியர்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது. அதன்படி அனைத்து ஐடி நிறுவனங்களும் ஒவ்வொரு மாதத்தின் 7 ம் தேதிக்குள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தற்போது பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் மாதங்களின் கடைசி வேலை நாள் அல்லது ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளத்தில் வழங்குகின்றன. ஆனால் சில ஐடி நிறுவனங்கள், ஐடி துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்குகின்றன. இந்த புதிய சட்ட தொகுப்புகள் ஐடி ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
அதேபோல் நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்றும் ஊழியர்களை போல் ஒப்பந்த ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளையும் கிடைக்க இந்த சட்ட தொகுப்புகள் உதவுகின்றன. அதேபோல் பணி நேரம் இருவருக்கும் ஒன்றாக இருப்பதையும், ஓவர் டைம்க்கு இரட்டை சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் இந்த சட்ட தொகுப்புகள் உறுதியளிக்கின்றன.
அதேபோல் ஆண்களுக்கு நிகராக பெண்களின் சம்பளமும் இருப்பதை இந்த சட்ட தொகுப்புகள் உறுதி செய்ய உள்ளன. அதுமட்டுமின்றி ஆண்களை போல் பெண்களையும் நைட் ஷிப்ட்டில் பணியாற்ற வைக்கலாம். ஆனால் அதற்கு முன்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து, ஊழியர்களின் விருப்பத்தை கேட்டறிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஆண்களுக்கு நிகராக பெண்களின் மதிப்பும் ஐடி நிறுவனங்களில் உயர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications