அடேங்கப்பா..!! ரூ 300 கோடி வரி ஏய்ப்பு.. சென்னையில் 35 இடங்களில் நடந்த ஐடி ரெய்டில் அம்பலம்
சென்னை: சென்னையை சேர்ந்த 2 நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.300 கோடி வருவாயை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த இரண்டு பிரபல தனியார் சிண்டிகேட் நிதி குழுக்களில் கடந்த 23ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் மொத்தம் 35 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த சோதனையில் பெருநிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் இந்த இரு நிறுவனங்களும் ரொக்கமாகப் பல கோடி ரூபாய்க் கடன் கொடுத்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பினாமி வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி கடன் கொடுத்தவர்களிடம் இருந்து இவர்கள் அதிக வட்டியை வசூலித்ததையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இரு நிறுவனங்களும் தங்கள் வருமானத்தை மறைத்து, பல கோடி ரூபாயை முறைகேடாக பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்துள்ளதும் இந்த சோதனையில் தெரிய வந்துள்ளது. இது தவிர சுமார் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை இந்த 2 நிறுவனங்களும் மறைத்து, வரி ஏய்ப்பில் ஈடுபட முயன்றதும் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 35 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத 9 கோடி ரூபாயை கைப்பற்றியதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது












Click it and Unblock the Notifications