சனாதனம்.. அழிவில்லாத நிலையான அறம்.. உதயநிதி கருத்துக்கு நேர் எதிர்.. தமிழக பாடப்புத்தகத்தில் பாருங்க
சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து எழுதப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் மேலெழுந்துள்ளன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கண்டனம் அதிகரித்திருக்கிறது.

இதுபோன்ற கண்டனங்களுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கறாராக கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், "சனாதனம் குறித்த அவதூறு கருத்துக்களுக்கு மத்திய அமைச்சர் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மோடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "பிரதமர் மோடியின் அறிவிப்பு மிகவும் ஆத்திரமூட்டல் மட்டுமல்ல, அரசியலமைப்பிற்கும் எதிரானது" என்று கூறியுள்ளார்.
இப்படியாக எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு அமைச்சர்கள் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் மேலெழுந்திருக்கின்றன. அதாவது, தமிழக அரசின் 12ம் வகுப்பு 'அறிவியலும் இந்திய பண்பாடும்' எனும் பாட புத்தகத்தில் அமைச்சர் உதயநிதி கூறிய கருத்துக்கு எதிராக 'சனாதனம் ஓர் அறம். வர்ணாஸ்ரமத்தில் உயர்வு தாழ்வு இல்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், "இந்த புத்தகம் கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்டது. எனவே தமிழக அரசு இதனை மாற்ற வேண்டும்" என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications