1 வருடத்தை நெருங்கும் செந்தில் பாலாஜி சிறைவாசம்.. மெலிந்த உடல், மனம்.. கடிந்து கொண்ட "குடும்பம்"
சென்னை: அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமலாக்கத்துறை வழக்கிற்கு எதிராக ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய முடிவு ஒன்றை எடுக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் பிணை வழங்க கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடுத்து இருந்தார்.

பெயில் கிடைக்கவில்லை: கடந்த முறை நடந்த விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளார். ஆனால் தற்போது அவர் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. புதிதாக வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளார் என்று அமலாக்கத்துறை நிலைப்பாடு எடுத்தது.
செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து வழக்கை ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் நாளைய தினம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை விடப்படும். இதனால் மே 15 ஆம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும். அப்போது பெயில் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.
இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி ஜூலை 10ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
1 வருடம் ஆக போகிறது: ஜூன் 14-ந்தேதி வந்தால் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு 1 வருடம் ஆகப்போகிறது. ஜூன் 14-க்கு இன்னும் 20 நாட்கள் தான் இருக்கிறது. சிறையில் செந்தில்பாலாஜி எப்படி இருக்கிறார்? என விசாரித்தபோது, மிகவும் பலகீனமான மனநிலையில் இருக்கிறார். உடல் மெலிந்து காணப்படுகிறார்.
முறையான சுகாதாரமான உணவு அவருக்கு வழங்கப்பட்டாலும் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படுகிறார். ஜாமீன் கிடைக்கும்ங்கிற நம்பிக்கை அவருக்கு போய்விட்டது. ஆனால், அவரது வழக்கை கவனித்துக்கொள்கிற திமுக வழக்கறிஞர்கள், ’’இனியும் உங்களை உள்ளே வைத்திருக்க எந்த முகாந்திரமும் அமலாக்கத்துறையிடம் கிடையாது. அடுத்த ஹியரிங்கில் நீங்கள் வெளியே வந்து விடுவீர்கள்’’ என்று கடந்த வாரம் கூட அவருக்கு உறுதியான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்களாம்.
ஆனால், இப்படித் தான் ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள்; எதுவும் நடப்பதாகத் தெரியவில்லையே'' என்று வக்கீல்களிடம் அவர் கடிந்து கொண்டதாக செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், இவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10-க்கு ஏற்கனவே உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தித்திருப்பதால் ஒரு வருடத்தைக் கடந்தும் அவர் சிறையில் இருக்கும் நிலை உருவாகியிருப்பதில் அவரது குடும்பத்தினர் மிகவும் நொந்து போயிருக்கிறார்களாம். அவரது குடும்பத்தில் புலம்பல்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
செந்தில் பாலாஜி கைது: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications