சென்னை பிஎஸ்கே குழுமத்தில் இன்று 3ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனையால் பரபரப்பு
சென்னை: சென்னையில் பிரபலமான பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று 3ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு பிஎஸ்கே குழுமத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியிருந்தது.
2019 ஆம் ஆண்டு நடந்த சோதனையில் ரூ 112 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்து விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது போல் ரூ 14 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருபவர் ஒப்பந்ததாரர் பெரியசாமி. இவர் பிஎஸ்கே என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சென்னை பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்னும் சோதனை முடியாத நிலையில் தற்போது மூன்றாவது நாளாக சோதனை நீடித்து வருகிறது.
சென்னையில் மயிலாப்பூர் நொச்சி நகர், பட்டினம்பாக்கம், லூப் சாலை, டூமிங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பிஎஸ்கே குரூப் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியிருந்தனர். அப்போது அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் பிஎஸ்கே குரூப் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சேலம் இளங்கோவனுக்கு முசிறி அருகே எம்ஐடி பாலிடெக்னிக் மற்றும் வேளாண் கல்லூரி உள்ளது. இங்கு 5 நாட்களாக வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு நிறைவடைந்தது. இளங்கோவன், அதிமுக பொதுச் செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நண்பர் ஆவார். இளங்கோவன் மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர். சேலம் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications