அமைச்சர் போட்ட கையெழுத்து.. மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விருதுநகர்.. 4 மாவட்டங்களுக்கு ஜாக்பாட்
சென்னை: மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் விருதுநகர் கோட்டங்களைச் சார்ந்த வணிகர்களுக்கான "சமாதானத் திட்டம் - 2023 விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம்" மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் உள்ள துவாரகா பேலஸ் அரங்கில் நேற்று வணிகவரித்துறை சார்பாக மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் விருதுநகர் கோட்டங்களைச் சார்ந்த வணிகர்களுக்கான "சமாதானத் திட்டம்- 2023 விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம்" நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 4 வணிகர்களுக்கு வரி நிலுவை தீர்வு செய்து ஆணைகள் மற்றும் மதுரை (2) திருச்சி (4) திருநெல்வேலி (2) விருதுநகர் (2) கோட்டங்களைச் சார்ந்த 10 வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடி (ரூ.50,000/க்கு கீழ் உள்ள நிலுவைகள்) ஆணைகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கி பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வணிகர்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி அளவில் வணிகவரி நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
என்ன சொன்னார்?: தமிழ்நாட்டில் வணிகர்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் சமாதான திட்டத்தை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது ரூ.50,000-க்கு கீழ் உள்ள நிலுவைத் தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள். மேலும் ரூ.10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20 சதவிகித வரியை செலுத்தினால் போதும் எனவும் அறிவித்துள்ளார்கள்.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் வணிகர்கள்சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி அளவில் வரிச்சலுகை பெற்று பயன் பெறுவார்கள். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு, வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு.
முக்கியமான திட்டம்: மேலும், வணிகர்கள் செலுத்தும் வரித்தொகைக்கான சான்றிதழ் உடனடியாக வணிகர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல்
வருகின்ற நவம்பர் 6-ஆம் தேதி சென்னை மண்டலத்திலும், 7-ஆம் தேதி
கோயம்புத்தூர் மண்டலத்திலும் வணிகர்களுக்கான "சமாதானத் திட்டம் - 2023
விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த அரசு எப்போதும் வணிகர்கள் நலனை பாதுகாக்கின்ற, அவர்களுக்கு உற்ற துணையாக செயல்படுகின்ற அரசாக விளங்கும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை திருமதி.பா.ஜோதி நிர்மலாசாமி . இ.ஆ.ப., அவர்கள், வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன் அவர்கள், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் திரு.அ.பா.தேவேந்திர பூபதி அவர்கள், இணை ஆணையர் மதுரை கோட்டம் திரு.மா.இரவி அவர்கள், வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications