ஜனநாயகன் படம் லீக்.. எடிட்டிங் ரூமில் இருந்தே கசிந்தது அம்பலம்.. முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது
சென்னை: ஜனநாயகன் படம் லீக் விவகாரத்தில் ஏற்கனவே 6 பேரை தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்த நிலையில் தற்போது மேலும் 3 முக்கிய குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். எடிட்டிங் ஸ்டூடியோவில் இருந்தே படத்தினை திருடி தொகுத்து இணையத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தை தணிக்கை செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகளால் படம் தற்போது வரை வெளியாகவில்லை.

படக்குழு தரப்பில் நீதிமன்றத்தை நாடியும் அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் இனி ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பிறகே வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் தான் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.
முதலில் சில நிமிட காட்சிகளும், பின்னர் முழு படமும் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தியேட்டரில் ரிலீஸ் ஆகும் முன்பே, முழு படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதற்கு, நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஜனநாயகன் படக் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழுவும் தெரிவித்து இருந்தது.
ஜனநாயகன் படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க கோரி சைபர் குற்றப்பிரிவு போலீசில் படக்குழுவினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட இணையதள லிங்குகள் அழிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் ஜனநாயகன் படத்தை லீக் செய்தவர்களில் முக்கியமான 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் சைபர் கிரைம் போலீசார். படத்தை கசியவிட்டவர் ஃப்ரிலேன்ஸ் படத்தொகுப்பாளர் என்பது தெரியவந்து இருக்கிறது. அதாவது எடிட்டிங் ரூமில் இருந்து படத்தின் ரீல்களை அனுமதியின்றி எடுத்துள்ளார். பின்னர் இந்த திருடப்பட்ட ரீல்களை திரைப்படமாக மாற்றி இருக்கிறார். மேலும் திரைப்படத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து இணையதளத்திலும் கசிய விட்டு இருக்கிறார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் தற்போது கைது செய்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications