அயலகத் தமிழர் திருநாள்! சென்னையில் ஒன்று கூடும் உலகத் தமிழர்கள்! வரவேற்க காத்திருக்கும் தமிழக அரசு!
சென்னை: சென்னையில் வரும் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களும் அயலகத் தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
தமிழர் வாழாத நாடு இந்த பூமிப்பந்தில் இல்லை என்று சொல்லத் தக்க அளவுக்கு பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள் தமிழர்கள். எந்த நாட்டுக்குச் சென்றாலும், சொந்த நாட்டையும் தாய்மொழியையும் தமிழர்கள் தங்கள் நெஞ்சக் கூட்டில் அடைகாத்து வைத்திருப்பது வழக்கம். விதை நெல்லாகத் தமிழை எடுத்துச் சென்று, தாங்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் விளையும் நிலங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அதற்கேற்ப தமிழர்கள் இன்று உலகெங்கும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். உலக நாடுகளோடு கொள்கொடை முறையில் தமிழ்மொழி வளர்ச்சியையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இவ்வாறெல்லாம் உலகின் பல நாடுகளில் புகழோடு விளங்கும் தமிழ்மொழியை பல நாடுகளிலும் வளர்ப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் சார்பில் சென்னையில் வரும் 11 மற்றும் 12ஆகிய இரண்டு நாட்களும் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படவுள்ளது. 2 நாள் கருத்தரங்கில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அயலக தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோர் இதில் இணைக்கப்பட்டுள்ள லிங்க் (https://forms.gle/MnsKsn9EfSMSCu8U9) மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்யும்பட்சத்தில் தங்குமிடம் உள்ளிட்ட விருந்தோம்பல் நிகழ்வை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையே ஒருங்கிணைக்கும் பணிகளை கவனித்துக் கொள்கிறது. இதனிடையே பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழர்களின் நலன் பேணவும் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும், புலம்பெயர் தமிழர் நலவாரியம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications