தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்! ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய பாஜக அரசு மறைமுக உதவி! -ஜவாஹிருல்லா
சென்னை: அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய பாஜக அரசு மறைமுக உதவி செய்வதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். அது மட்டுமல்ல இவ்விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் ஓ.என்.ஜி.சி. அனுமதி பெற்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;
ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: '' அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் கடலூர் மாவட்டத்தில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரி அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்த விபரத்தை மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.''
கருத்து கேட்பு கூட்டம்: ''தமிழ்நாடு அரசால் அனுமதி மறுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளை எப்படியாவது நிறுவ வேண்டும் என்கிற முயற்சியை ஒஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க கருத்து கேட்டு கூட்டம் நடத்த டெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்று இருக்கிறது.''

தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கணும்: ''தமிழ்நாடு அரசு மறுத்து விட்ட நிலையில் ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது ஏற்புடையது அல்ல. மக்கள் நலனை விட கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதில் முனைப்பாக இருக்கிறது. அரியலூர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களும் தமிழ்நாடு அரசும் கவனமாக இருந்து நாசகார ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இப்பகுதியில் வர விடாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். '' இதனிடையே ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள இப்பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications