திருப்பூரில் கோட்சே நினைவேந்தல்; சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க சதி; கொதிக்கும் ஜவாஹிருல்லா!
சென்னை: மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவுக்கு தமிழகத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயலை இனி யாரும் செய்யக்கூடாது என்கிற உணர்வைத் தரும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''தேசத்தந்தை மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சே 1949 நவம்பர் 15ல்குற்றம் நிரூபிக்கப்பட்டு அரியானா மாநிலம் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்து இந்திய நாட்டிற்குக் காந்தி தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கோரிக்கை வைத்தார். அந்த அளவிற்கு மகாத்மா காந்தியைப் போற்றும் தமிழகமண்ணில் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தில் திருப்பூர் சிவசேனா அலுவலகத்தில் யுவ சேனா அமைப்பின் சார்பில் வீரவணக்க நாள் கொண்டாடி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தமிழகத்தின் சமூக நல்லிணக்க பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கும் வகையிலும் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் தமிழகத்தின் தத்துவார்த்த சிந்தனையைச் சிதைக்கும் முயற்சியாகும்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கடும் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இது போன்ற செயலை இனி யாரும் செய்யக்கூடாது என்கிற உணர்வைத் தமிழக அரசும் காவல்துறையும் ஏற்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள்கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications