மக்களுக்கு இது சுமை! சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்! தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
சென்னை: சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் பொருளாதார சிரமத்தைக் கருத்தில் கொண்டு அரசு இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சொத்து வரி
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் உள்ள சொத்துவரியை 25 முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சொத்து வரி உயர்வு, சொத்துக்களின் உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது, வாடகைதாரர்கள், கட்டிடங்களில் வணிக நிறுவனங்கள் நடத்திவரும் அனைத்து தரப்பினர் மீதும் இது கூடுதல் சுமையாக விழும்.

மக்களுக்கு பாதிப்பு
ஏற்கெனவே, பெட்ரோல்&டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணங்கள் போன்றவை விலை உயர்ந்துள்ள காரணத்தால் அன்றாட மக்கள் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவை விலை உயர்ந்துள்ளன. கொரோனா பாதிப்பிலிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்கள் தற்போது மெல்ல மெல்ல இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த சொத்துவரி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

திரும்பப் பெறுக
ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் இந்த சொத்து வரி உயர்வு செய்யப்பட்டிருந்தாலும் இந்த வரி உயர்வு தமிழக மக்களுக்கு கூடுதல் சுமை ஆகும்.
எனவே தமிழக அரசு, மக்களின் பொருளாதார சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்த சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வலுக்கும் கோரிக்கைகள்
சொத்து வரி உயர்வுக்கு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளே ஆட்சேபனை தெரிவிக்கத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியும் சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications