காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் மூலம்... சென்னைக்கு வெள்ள ஆபத்து -ஜவாஹிருல்லா எச்சரிக்கை
சென்னை: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் மூலம் சென்னைக்கு வெள்ள ஆபத்து ஏற்படும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எச்சரித்துள்ளார்.
இதனால் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நாடு முழுவதிலும்
சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் அதானி குழுமத்திற்கு நாட்டின் பல மாநிலங்களில் உள்ள 8 துறைமுகங்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மிக பெரும் சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.
அதானி குழுமத்திடம்
பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் அதானி குழுமத்திடம் காட்டுப்பள்ளி துறைமுகம் ஒப்படைக்கும் இந்த நாசகர திட்டத்தின் காரணமாக சுமார் ஒரு இலட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சுமார் 35 லட்சம் தமிழக மக்கள் வெள்ள அச்சுறுத்தலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் இயற்கை வளமும் பெரிதும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யாராலும் தடுக்க முடியாது
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திரவில் உள்ள 82 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே எஞ்சி கடற்கரை அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் நேரிடும். இதன் விளைவாக சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது.
எண்ணூர் கழிமுகம்
இத்திட்டம் வரவிருக்கும் காட்டுப்பள்ளி பகுதிக்கு வடக்கில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. தெற்கில் எண்ணூர் கழிமுகமும், மேற்கில் பக்கிங்காம் கால்வாய் சூழப்பட்டிருப்பதால் இது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக CRZ-1 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதின் மூலமாக சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி அழிவதற்கான வாய்ப்புள்ளது.
கைவிட வேண்டும்
அதானி குழுமத்தின் கொள்ளை லாப வெறிக்கு உதவுவதற்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, இயற்கை வளத்தைக் காவு கொடுத்து சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக மாற்றவுள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனே கைவிட வேண்டும் என்று கோருகிறோம்.