"இது ரொம்ப தப்பு.. அண்ணாமலை நடவடிக்கை எடுக்கணும்! இல்லைனா.." பட்டுனு ஆவேசமான ஜெயக்குமார்! என்னாச்சு
சென்னை: அதிமுக பாஜக இடையே வார்த்தை போர் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், இப்போது இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரஸ் மீட்டில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்புகள் வந்தாலும் கூட கூட்டணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
சில காலம் முன்பு வரை இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வந்தனர். குறிப்பாக பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் இருக்கக் கூடாது என்றெல்லாம் கூறியிருந்தார்.

கூட்டணி: அதன் பின்னர், திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிடும் போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, விரைவில் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். அது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கோபத்தைக் கிளப்பியது. இதற்குப் பல அதிமுக தலைவர்கள் அப்போதே எதிர்வினையாற்றினர். கூட்டணியில் இருந்து கொண்டு இப்படிப் பேசுவது சரியில்லை என்று விமர்சித்தனர்.
ஒரு கட்டத்தில் அதிமுக மூத்த தலைவர்களும் அண்ணாமலைக்கு எதிராகப் பேசினர். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அண்ணாமலை குறித்து எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் என்று கூறியிருந்தார்,.. அண்ணாமலை சும்மா பேசி பேசி பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைப்பதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, முதிர்ந்த அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கு மட்டும் தன்னால் பதில் கூற முடியும் என்றும் அண்ணாமலை குறித்துப் பேச வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இதனால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கு அதிமுக பாஜக இடையே உள்ள கூட்டணி உடையுமோ என்ற பேச்சு எழுந்தது. இந்தச் சூழலில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த மீட்டிங்கில் பல்வேறு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்தச் சந்திப்பிற்குப் பின்னரே எடப்பாடி டோன் முற்றிலுமாக மாறியது. அண்ணாமலைக்கும் தங்களுக்கும் எந்தவொரு தகராறும் இல்லை என்று கூறியிருந்தார்.
சர்ச்சை கருத்து: இதனிடையே தற்போது இரு தரப்பிற்கும் மீண்டும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற வலுவான தலைமை இல்லை. ஆளும் கட்சியாகவும் இல்லை. இப்போது அவர்களுக்கு உள்ளேயே பல பிரிவுகள் உள்ளது. ஆனால், நாங்கள் அப்படி இல்லை சுயமாக இருக்கிறோம்.
அண்ணாமலைக்கு இப்போது மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி இருக்கவே செய்கிறது. எனவே, அடுத்து வரும் தேர்தலில் குறைந்தது 25 இடங்களை ஒதுக்க வேண்டும். அப்போது தான் இந்தக் கூட்டணிக்கு அர்த்தம் இருக்கும். அவர்கள் கொடுக்கும் இடத்தில் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது" என்று கூறியிருந்தார். எடப்பாடியின் டெல்லி மீட்டிங்கிற்கு பிறகு இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், இந்த கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியது.

ஜெயக்குமார் பதிலடி: இதனிடையே இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், "நாங்கள் கூட்டணி என்ற அடிப்படையில் அமித் ஷாவை சந்தித்துள்ளோம். அதன் பிறகும் பாஜக தலைவர்கள் அதிமுக குறித்துப் பேசி வருகிறார்கள். இது சரியான போக்கு இல்லை. அவர்கள் இப்படிப் பேசினால் நாங்களும் எதிர்வினையாற்றுவோம். அதற்கும் தயாராகவே உள்ளோம்.
இதைத் தடுக்க அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அண்ணாமலை தலையிட வேண்டும். அப்படி அவர் தலையிடவில்லை என்றால் நாங்களே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் அதிமுக பாஜக தலைவர்களுக்கு இடையேயான வார்த்தை போர் ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications