ஜெயலலிதா மரணம்: ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்துக்கு கோடிக்கணக்கில் செலவு.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்துக்கு செய்யப்பட்ட செலவு எவ்வளவு? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா 2016 டிசம்பர் மாதம் 5ல் தேதி காலமானார். இதற்கிடையே தான் அவரது மரணம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டது.

ஆறுமுகச்சாமி ஆணையம் விசாரணை
இதையடுத்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2017 செப்டம்பரில் விசாரிக்க துவங்கியது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்தியது. மேலும் விசாரணை ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இடைக்கால தடையால் 2 ஆண்டுகள் வரை விசாரணை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் விசாரணை துவங்கிய நிலையில் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அறிக்கை தாக்கல்
கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்தது. மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆணையத்தின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி முடியாததால் தொடர்ந்து ஆணையம் சார்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டு வந்தது. தமிழக அரசும் காலஅவகாசம் வழங்கி வந்தது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு விசாரணை அறிக்கையை ஆறுமுகச்சாமி ஆணையம் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது.

ரூ.4 கோடியே 81 லட்சம் செலவு
இந்நிலையில் தான் ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணை ஆணையத்துக்கு செலவான தொகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதி, அலுவலர்களின் அடிப்படை சம்பளம், மருத்துவம், வீட்டு வாடகை படி, பயணச்செலவு, தெலைபேசி கட்டணம், தபால் செலவு, வாகன பாரமிப்பு, அரசு வழக்கறிஞர்கள் கட்டணம், வாகனங்களுக்கான எரிபொருள் செலவு உள்பட பல்வறு வகைகளில் மொத்தம் ரூ.4 கோடியே 81 லட்சத்து 12 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆண்டு வாரியாக எவ்வளவு?
நிதியாண்டு வாரியாக பார்த்தால் ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்துக்கு 2017 - 2018 ல் 30 லட்சத்து 5 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது. 2018-19ல் ரூ.83 லட்சத்து 6 ஆயிரமும், 2019-20ல் ரூ.1 கோடியே 8 லட்சத்து 31 ஆயிரமுமு், 2020-2021ல் ரூ.1 கோடியே 3 லட்சத்து 25 ஆயிரமும் செலவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 2021-2022 ல் ரூ1 கோடியே 4 லட்சத்து 53 ஆயிரமும், 2022- 2023ல் ரூ.51 லட்சத்து 92 ஆயிரமும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிகிச்சைக்கு எவ்வளவு?
இந்த 6 நிதியாண்டில் இரண்டு கடைசி 2 ஆண்டுக்கான செலவு மட்டுமே திமுக அரசு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை தனியார் மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சை பெற்ற நிலையில் ரூ.6 கோடி செலவழிக்கப்பட்டது என கூறப்படும் நிலையில் அவரது மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு ரூ.4.81 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications