ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்ன?..அதிர வைக்கும் மருத்துவர்கள் வாக்குமூலம் - முழு ரிப்போர்ட்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இருந்த கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்பே மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் குழு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமாக தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முறையான சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மூளை மற்றும் இதயம் செயலிழந்து ஜெயலலிதா உயிரிழ்ந்ததாகவும் அறிக்கையில் .
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
துரத்தும் 'ஜெயலலிதா’ மரணம்! எய்ம்ஸ் தந்தது அறிக்கை தானே! இறுதி தீர்ப்பு இல்லையே? விடாத புகழேந்தி..!
தர்மயுத்தம்
அப்பல்லோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.
ஆறுமுகசாமி ஆணையம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது. ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017ஆம் முதல் விசாரணையைத் தொடங்கியது.
பல்டி அடித்த ஓபிஎஸ்
போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர். ஜெயலலித உடன் இருந்த சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதே நேரத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறி பல்டி அடித்தார். பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்று கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவக்குழு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவுகின்ற வகையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவின்படி ஆறு பேர் கொண்ட மருத்துவ குழுவை நியமித்திருந்தது எய்ம்ஸ்.
செப்டம்பர் 22ல் நடந்தது என்ன?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 5 நாட்கள் முன்பாகவே காய்ச்சல் மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில், 22 செப்டம்பர் 2016 இரவு 10 மணிக்கு அவரது உடல்நிலை மோசமானது. அப்போது மூளையின் செயல்திறன் குறைந்து ஆக்சிஜன் அளவு 48%, நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 88 என்ற அளவிலும், ரத்த அழுத்தம் 140/70 என்ற அளவிலும், ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாகவும் இருந்துள்ளது.
அவசர சிகிச்சை
இந்நிலையில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மூச்சுத்திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் மருந்துகள் செலுத்தப்பட்டது. மேலும் இதய துடிப்பை கட்டுப்படுத்த பேஸ்மேக்கரும் பொருத்தப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரானது.
டிசம்பர் 5ல் மரணம்
அப்போது அவருக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு அது பலன் அளித்துள்ளது. பாக்டீரியா பாதிப்பால் அவரது சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. டிசம்பர் 4ஆம் தேதியன்று அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய நாளிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சி.பி.அர் சிகிச்சையை தொடர்ந்து 24 மணி நேரம் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு, மூளை மற்றும் இதயம் செயலிழந்து அவர் உயிரிழந்தார்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்
மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாகவே ஜெயலலிதாவிற்கு சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், தலைசுற்றல், தைராய்டு, மரபுவழி தோல் அழற்சி, குடல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நரம்பு தளர்ச்சி போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பாக திராட்சை பழம், கேக், இனிப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணை அறிக்கை தாக்கல்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் சுமார் 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்ய உள்ளது. ஆணையம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளில் 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.