உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஜெய்ஆனந்த் திவாகரன் நோட்டீஸ்
சென்னை: சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்,
அப்படித்தான் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவின் காலில் விழுந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை பெற்றதாக விமர்சித்தார்,

வானதி சீனிவாசன் கண்டனம்
அப்போது அவர் பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சையாகி உள்ளது. சசிகலா குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தேனி மகளிரணி ஆணைய தலைவர் வானதி சீனிவான் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

உதயநிதிக்கு நோட்டீஸ்
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும், அவரது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜெய்ஆனந்த் திவாகரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். "எடப்பாடி டெட்பாடி, எடப்பாடி சசிகலா காலில் விழுந்து கும்பிட்டாரு விட்டா அந்தம்மா காலுக்குள் புகுந்திருப்பாரு" என்று உதயநிதி ஸ்டாலின் சசிகலா குறித்து அவதூறாக பேசியுள்ளார் என சுட்டிக் காட்டியுள்ள ஜெய் ஆனந்த், உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சை திரும்ப பெறவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கருணாநிதி பேரன்
பெண் என்றும் பாராமல் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை கொண்டு உதயநிதி விமர்சித்தது கடும் கண்டனத்துக்குரியது என்றும் திவாகரன் நோட்டீஸில் கூறியுள்ளார். முன்னதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருந்த ட்விட் பதிவில், "பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்திப் பேசிய கருணாநிதியின் பேரன் என்பதை ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி.

வருத்தமளிக்கிறது
நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாகப் பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி.பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில், இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது" என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications