சரணடைந்து மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே.. வார்த்தைய கவனிச்சீங்களா? என்ன இவரு இப்படி சொல்றாரு? போச்சே
ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியிடம் சரண் அடைந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியன்.
சென்னை : அதிமுகவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக அவரது தரப்பினர் கூறி வரும் நிலையில், பாஜக தங்கள் பக்கம் நிற்கும் என்று ஓபிஎஸ் அணியினர் நம்பி வந்தனர். ஆனால், இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் வேட்பாளருக்கு கிடைத்ததும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்ததும் ஓபிஎஸ்ஸுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் கூட்டணி கட்சிகளும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு அளித்து வருகின்றன. பாஜக ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பதை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மருது அழகுராஜ் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தமமுக தலைவர் ஜான் பாண்டியன், ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியிடம் சரண் அடைந்து மன்னித்துக் கொள்ளுங்கள் என சொல்ல வேண்டியதானே.. ஏன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டணி கட்சிகள்
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து பெருவாரியான கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கின்றனர். சொற்ப நிர்வாகிகளும் 3 எம்.எல்.ஏக்களும், ஒரு எம்.பியும் மட்டுமே ஓபிஎஸ் உடன் நிற்கின்றனர். அதிமுகவினர் மட்டுமல்லாது அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்த நிலையில், அவர்கள் ஈபிஎஸ் ஓபிஎஸ் இணைந்து வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறினர்.

ஈபிஎஸ் பக்கம்
ஆனால், அதன் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஈபிஎஸ் அணியின் வேட்பாளருக்கே இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஓபிஎஸ் போட்டியில் இருந்து பின்வாங்கினார். இதையடுத்து, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், ஈபிஎஸ்ஸூக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்துள்ளதால், கூட்டணி கட்சிகள் முழுமையாக ஈபிஎஸ் பக்கமே தங்கள் ஆதரவுப் பார்வையைத் திருப்பியுள்ளன.

ஒற்றைத் தலைமை
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், "அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் ஒற்றை தலைமையாக அங்கீகாரம் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று எண்ணியவர்களின் கனவுகளை தகர்தெறிந்து ஒற்றை தலைமையாக உருவெடுத்து அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தலைநிமிர செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்
அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் கட்சி உரிமை கொடுக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்குதான் ஆதரவு உள்ளது. உட்கட்சி பிரச்சனைக்காக நீதிமன்றம் சென்றது தவறு என்று கூறி வந்தேன். நீதிமன்றமும் தற்போது தீர்ப்பை வழங்கிவிட்டது, ஓபிஎஸ் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஏன் மல்லுக்கட்டுகிறார்?
பொதுக்குழு உறுப்பினர்களீல் 99 விழுக்காடு ஆதரவு எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியிடம் சரண் அடைந்து மன்னித்துக் கொள்ளுங்கள் என சொல்ல வேண்டியதானே.. ஏன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்? இன்றைய சூழ்நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் கட்சியின் உரிமையை அவரிடமே கொடுத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

ரத்து செய்யவேண்டும்
மேலும் பேசிய ஜான் பாண்டியன், தேர்தல் அறிவித்த பிறகு எதையும் அறிவிக்கக்கூடாது என தேர்தல் விதிமுறை உள்ளது. ஆனால் முதலமைச்சர் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என கூறியுள்ளார். முதல்வர் பேசியது தேர்தல் விதிமுறை மீறிய செயல், 1000 ரூபாய் தருகிறேன் என ஆசை வார்த்தை கொடுத்து மோசம் செய்வது தவறு. தூங்கிக்கொண்டு இருக்கும் தேர்தல் ஆணையம் உடனடியாக இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications