எனது இல்ல மணவிழாவுக்கு வாருங்கள்... முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த ஜான் பாண்டியன்..!
சென்னை: தனது மகன் திருமண விழாவுக்கு வருகை தருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் மகன் வியங்கோ பாண்டியனுக்கும் சென்னையை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மகள் ஷாலினிக்கும் இம்மாதம் 27-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-நெல்லை சாலையில் அமைந்துள்ள தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இத்திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் அங்கு முகாமிட்டு கவனித்து வருகின்றனர்.
இதனிடையே தனது மகன் திருமண விழா என்பதால், கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் ஜான்பாண்டியன். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை அன்று வீட்டிற்கு வருமாறு ஸ்டாலின் தரப்பில் இருந்து ஜான்பாண்டியனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், பத்தோடு பதினொன்றாக கோட்டைக்கு வரச் சொல்லுங்கள் என்று கூறாமல் ஜான்பாண்டியனை வீட்டிற்கு வரச்சொல்லுங்கள் என முதலமைச்சர் கூறியிருந்தது தான். இதனால் ஜான் பாண்டியன் குடும்பத்தினரும் அவரது கட்சியினரும் டபுள் ஹேப்பி.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக ஜான் பாண்டியன் அறிவித்துள்ள சூழலில், முதல்வருடனான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸையும் மகன் திருமண விழாவுக்கு அழைக்கவுள்ள ஜான்பாண்டியன், முதலமைச்சர் ஸ்டாலினையும், ராமதாஸையும் தனது இல்ல மணவிழாவில் ஒரே மேடையில் அமர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு ஜான் பாண்டியன் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications