‛ஜோக்கர்’ பட இயக்குநரின் மனைவிக்கு டார்ச்சர்.. அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் பாலியல் குற்றம்?
சென்னை: தேசிய விருது வென்ற ‛ஜோக்கர்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜு முருகனின் மனைவிக்கு அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த சங்க நிர்வாகிகள் டார்ச்சர் கொடுப்பதாக பரபரப்பான புகார் எழுந்துள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜு முருகன். இவர் குக்கூ, ஜோக்கர், ஜப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். ‛ஜோக்கர்' திரைப்படத்துக்கு ராஜு முருகன் தேசிய விருது என்பது கிடைத்தது. அடுத்ததாக நடிகர் சசிகுமாரை வைத்து படம் இயக்கி வருகிறார்.

ராஜு முருகனின் மனைவி பெயர் ஹேமா சின்ஹா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜு முருகன் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். சென்னை அய்யப்பன்தாங்கலை அடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 2000க்கும் அதிகமான வீடுகள் என்பது உள்ளது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உள்பட பல சினிமா பிரபலங்கள் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சில பாலியல் ரீதியிலான குற்ற சம்பவங்கள் நடப்பதாக ராஜு முருகனின் மனைவி ஹேமா குற்றம்சாட்டி உள்ளார்.
இதுபற்றி அவர் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்து பாலியல் ரீதியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக புகார் அளித்த ராஜு முருகனின் மனைவி ஹேமாவுக்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மனஉளைச்சலை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ராஜு முருகனின் மனைவி ஹேமா சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் பல சினிமா பிரபலங்கள் உள்ளனர் . இதனால் கட்டுப்பாடுகள் உள்ளது. இதற்கான பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 3 மாதத்துக்கு ஒருமுறை பராமரிப்புதொகை வசூலிக்கப்படுகிறது. முன்கூட்டியே பராமரிப்பு தொகை அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
மூன்று மாதத்துக்கு ஒருமறை ரூ.22 ஆயிரம் பராமரிப்பு தொகை கொடுத்தும் கூட எங்களின் வீட்டை பராமரிக்க தவறுகின்றனர். குப்பையை சரியாக அகற்றுவது இல்லை. மின்சார பிரச்சனையை சரிசெய்யவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு வளாக நீச்சல் குளத்தில் எனது குழந்தைகளை தடுக்கின்றனர். அதோடு முறையாக பராமரிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்று பக்கத்து வீட்டில் வசிப்போரிடம் அவதூறு பரப்புகின்றனர்.
இதனால் நிர்வாக சீர்கேடு எழுந்துள்ளது. இதுபற்றி கேள்வி கேட்டால் மனஉளைச்சலை குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தருகின்றனர். போலீசில் புகார் அளித்தாலும் குடியிருப்பு நிர்வாகிகள் பேசி நடவடிக்கை எடுக்காதபடி தடுக்கின்றனர்'' என்று கூறியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து எஸ்ஆர்எம்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக ஹேமா முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications