அவ்வளவு பிரச்சனை இருந்தும்.. அண்ணனுக்காக ஓடி வந்த ஜோதிமணி.. கொஞ்சம் கூட நன்றி மறக்கலை.. நெகிழ்ச்சி!
சென்னை: பல பிரச்சனைகள் இருந்தும் .. சொந்த கட்சியே தன்னை எதிர்க்கும் போதும் கூட இன்னொரு கட்சி வேட்பாளருக்காக ஜோதிமணி சூறாவளி பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.
அரசியலில் நண்பர்கள் என்று யாரும் இல்லை.. அரிதாக ஒரு சிலர்தான் அரசியலில் நண்பர்கள் ஆவார்கள். கட்சி கடந்து ஏற்படும் நட்பு எல்லாம் அபூர்வம். அந்த வகையில்தான் திமுகவின் செந்தில் பாலாஜிக்கும் காங்கிரசின் ஜோதிமணிக்கும் இடையில் நீண்ட காலமாக நல்ல நட்பு நிலவி வருகிறது.
கரூர், அரவக்குறிச்சி அரசியலில் ஒரு காலத்தில் இவர்கள் இரண்டு பேருமே போட்டி மனப்பான்மையோடு இருந்தவர்கள்தான். ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில்தான் இவர்கள் இடையே நட்பு ஏற்பட்டது.

திமுக
செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பின் நடந்த லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி போட்டியிட்டார். அங்கு காங்கிரஸ் கோஷ்டி மோதல் கடுமையாக இருந்தது. ஜோதிமணிக்கு சீட் கொடுத்ததை கட்சிக்கு உள்ளேயே சிலர் எதிர்த்து வந்தனர். அப்போது ஜோதிமணிக்கு அரணாக வந்தவர்தான் திமுகவின் செந்தில் பாலாஜி.

பிரச்சாரம்
காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கைவிட்டாலும் ஜோதிமணிக்கு ஆதரவாக நெருப்பு மாதிரி எல்லா தொகுதியிலும் செந்தில்தான் பிரச்சாரம் செய்தார். தனக்காகவே பிரச்சாரம் செய்வது போல.. நேரம் காலம் பார்க்காமல் பிரச்சாரம் மேற்கொண்டார். என் சகோதரிக்கு ஓட்டு போடுங்கள் என்று வீடு வீடாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் கரூர் எம்பியாக ஜோதிமணி வெற்றிபெற செந்தில் முக்கிய காரணமாக இருந்தார்.

ஜோதிமணி
நன்றி மறக்காத ஜோதிமணி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜிக்காக பிரச்சாரம் செய்தார். செந்தில் பாலாஜி செய்தது போலவே நேரம் காலம் பார்க்காமல் சாலையில் இறங்கி அவருக்காக ஜோதிமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதில் இருந்தே இவர்களுக்கு இடையில் மிகவும் சிறப்பான நட்பு இருக்கிறது.

நட்பு
இந்த நிலையில் தற்போது அதே நன்றி உணர்வோடு செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரசுக்குள் வேட்பாளர் தேர்வில் நிறைய குளறுபடி இருப்பதாக ஜோதிமணி குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு கோபண்ணா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக பதில் அளித்து இருந்த நிலையில் காங்கிரசில் உட்கட்சி பூசல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஆனால் என்ன
ஆனால் இந்த உட்கட்சி பூசலுக்கு இடையிலும் கூட செந்தில் பாலாஜிக்காக கரூர் தொகுதியில் ஜோதிமணி சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்கிறார். திமுக நிர்வாகிகளுக்கு இணையாக ஜோதிமணியும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். நேற்று உட்கட்சி விவகாரம் உச்சியில் இருந்த போது கூட ஜோதிமணி பிரச்சாரம் செய்தார்.. அரசியலில் இப்படி சுயநலமற்ற நட்பு, பாலினம் கடந்த நட்பு, சகோதர உறவு எல்லாம் மிக மிக அரிதானது... அந்த வகையில் இவர்கள் இருவருமே தமிழக அரசியலில் வியக்க வைக்கிறார்கள்!












Click it and Unblock the Notifications