சாதிய வன்மம்,சங்கி..பெரியார் சர்ச்சையில் சந்தானத்தை கடுமையாக விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி!
சென்னை: தந்தை பெரியாரை விமர்சித்த நடிகர் சந்தானம் சாதிய வன்மம் கொண்டவர்; சங்கி என கடுமையாக விமர்சித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி.
ஜெ.பிஸ்மி யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: நடிகர் சந்தானத்தை நான் குப்பை என சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதில் நடிகர் சந்தானம், பொங்கல் வைப்பது போல ஒரு படத்தை வெளியிட்ட ட்வீட் பதிவில், நான் அந்த ராமசாமி இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியாரைத்தான் குறிப்பிட்டார்: நடிகர் சந்தானம், அந்த ராமசாமி இல்லை என சந்தானம் குறிப்பிடுவது யாரை என்பது ட்வீட்டை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். சந்தானம் அப்படி குறிப்பிட்டது தந்தை பெரியாரைத்தான். சந்தானம் இப்படி ஒரு ட்வீட் போட்டதால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு, கடுமையான விமர்சனங்களும் வசைகளும் விழுந்தன. தன்னுடைய ட்வீட்டுக்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்காத சந்தானம் பயந்து அந்த ட்வீட்டை டெலீட் செய்துவிட்டார்.
வருத்தம் தெரிவிக்கலையே: வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கான புரமோசனாக அந்த ட்வீட் போட்டிருக்கிறார் சந்தானம். சந்தானம் போட்ட ட்வீட், மக்கள் மனதை புண்படுத்தி இருக்கும் போது அதற்கு வருத்தம் தெரிவிப்பதுதான் அடிப்படையான மனித பண்பு. ஆனால் எதிர்ப்புக்கு பயந்த சந்தானம், ட்வீட்டை நீக்கியதுடன் இந்த நிமிடம் வரை தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.
பெரியார் மீது விமர்சனம்: வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரிலும் தந்தை பெரியாரை மிக மோசமாக விமர்சிக்கிற வசனம் இருக்கிறது. ஒரு கதாபாத்திரம், யப்பா சாமீ இல்லைன்னு ஊருக்கு சுத்திகிட்டு திரிஞ்சயே அந்த ராமசாமிதானே நீ? என ஒரு கேள்வி கேட்கிறது. தந்தை பெரியாரை கடுமையாக அந்த படத்தில் சந்தானம் விமர்சனம் செய்திருக்கிறார் என்றே தெரிகிறது.
சாதிய வன்மம், சங்கி: சந்தானம் ஒரு காமெடி நடிகர் மட்டுமல்ல. சாதிய வன்மம் பிடித்த சங்கி. ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் குறித்து சர்ச்சை எழுந்தது. அப்போது சந்தானம், ஒரு நடிகராக இல்லாமல் வன்னியராகவே கருத்து தெரிவித்திருந்தார். சந்தானம் அடிப்படையில் ஒரு சங்கி. 6,7 ஆண்டுகளாக ஜக்கி வாசுதேவின் சீடராக வெளிப்படுத்துகிறார். தன் வாழ்க்கையையே நெறிப்படுத்தியவர் ஜக்கி வாசுதேவ் என கூறி வருகிறார் சந்தானம். ஜக்கியின் பிராண்ட் அம்பாசடராகவே சந்தானம் இருந்து வருகிறார். அதனால்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், சந்தானத்தை தீய சக்தி என விமர்சித்தார். இந்துத்துவா சக்திகளும் சங்கிகளும் செய்கிற அதே வேலையைத்தான் சந்தானமும் செய்திருக்கிறார். ஆகையால்தான் சங்கி என்கிறோம். இவ்வாறு ஜெ.பிஸ்மி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications