பாஜகவை பார்த்து ஈபிஎஸ்க்கு பயமா?24 மணி நேரம் டைம் கொடுத்த அண்ணாமலை..உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர்
அதிகார மமதையில் வரும் வார்த்தை இது என அண்ணாமலை பேச்சு பற்றி விமர்சித்துள்ளார் பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன்.
சென்னை : "தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை இப்போது கவிழ்க்க முடியாது. ஜனாதிபதியே உத்தரவு போட்டாலும் அடுத்த 10 நாட்களில் இதே ஸ்டாலின் தலைமையில் இந்த அரசு உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்படும்." என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன்.
அண்மையில் எழுந்த வட மாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் பாஜகவினர் வதந்தி பரப்பியது நிரூபிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் பதற்றத்தைத் தூண்டும் விதமான அவதூறு கருத்துகள் இருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதற்கு, 24 மணி நேரம் தருகிறேன், முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சவால் விட்டார் அண்ணாமலை. அவரை ஏன் திமுக அரசு கைது செய்யவில்லை என்பது பற்றியும், இந்த விவகாரங்கள் குறித்தும் நம்முடன் பேசியுள்ளார் எஸ்.பி.லட்சுமணன்.

அண்ணாமலையை பார்த்து எடப்பாடிக்கு பயமா
கேள்வி : பாஜக உடன் உரசல் ஏற்படும்போதெல்லாம், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவின் மாநிலத் தலைமையுடன் தான் பிரச்சனை, மோடியுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லப்படுகிறதே.. ஒருவேளை கொங்கு மண்டலத்தில் இருந்து அண்ணாமலை ஒரு பெரிய தலைவராக உருவெடுப்பதை ஈபிஎஸ் விரும்பவில்லையோ?
எஸ்பி லட்சுமணன் : ஒரு பெரிய கட்சியின் தலைவராக தன்னை நிரூபித்த எடப்பாடி பழனிசாமி, இப்போதுதான் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள ஒருவருடன் ஒப்பிட்டு இதுபோன்று செயல்பட மாட்டார் என்று நம்புகிறேன். எடப்பாடி பழனிசாமியின் அனுபவத்தில் 10% கூட அண்ணாமலைக்கு இல்லை. அண்ணாமலையை பார்த்து எடப்பாடி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி பயப்படுகிறார் என்றால், அண்ணாமலைக்குப் பின்னால் இருக்கும் கட்சியின் பலத்தைப் பார்த்து பயப்படுகிறார் என்றுதான் அர்த்தம்.

அமர் பிரசாத் ட்வீட்டால்
கேள்வி : அண்ணாமலையின் குரலாக இருக்கும் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும், எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் கூட்டணி இல்லை என்று அறிவிக்கட்டும் என்று சொன்னார்கள்.. எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுக்காவிட்டால், ஈபிஎஸ் அண்ணாமலைக்கு அஞ்சுகிறார் என்றுதானே அர்த்தம்?
எஸ்பி லட்சுமணன் : அமர் பிரசாத் ரெட்டி ட்வீட் ஒன்று வந்தது. நீங்க ஆட்சியில் இருக்கும்போது செய்த 420 வேலையெல்லாம் எங்களுக்குத் தெரியும், உங்களை அதிகாரத்தில் அமர்த்தியவர்களையே எப்படி விமர்சித்தீர்கள் என்றும் தெரியும் எனக் கூறினார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு அவசர அவசரமாக பாஜக கூட்டணி தொடரும் என ஜெயக்குமார் அறிவித்ததைப் பார்த்தால், அமர் பிரசாத் ரெட்டியின் ட்வீட்டால் பயந்தீர்களா என்ற கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

இப்போது அவசியம் என்ன
இந்த யூகங்களுக்கு இடம்தராமல், இந்தக் கட்சியை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையாத வரை, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்துதான் ஆகவேண்டிய கட்டாயம். மிக வலுவான பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. அவரது கட்சியுடனான கூட்டணி அதிமுகவுக்கு பிளஸ்ஸாக அமையும், அதேபோல, தமிழ்நாட்டில் வலுவான அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது பாஜகவுக்கும் பலன் தரும். எனவே, பரஸ்பரம் இயல்பாக அமையப்போகும் இந்தக் கூட்டணியை பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாமே? இப்போதே பேசவேண்டிய அவசியம் என்ன? ஒரு எதிர்வினையை ஓரிரு நாட்கள் கூட துணிச்சலாக நீங்கள் காட்டவில்லை என்றால் அதிமுகவை பார்த்து நான் வேதனைப்படுகிறேன்.

பாஜக டிராமா?
கேள்வி : வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜக வதந்தி பரப்புவதாக ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அதை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டதற்காக அதிமுக - பாஜக மோதல் உருவகப்படுத்தப்பட்டதா?
எஸ்பி லட்சுமணன் : எடப்பாடியோ, பாஜகவோ, திமுகவோ, காங்கிரஸோ யார் ஒருவர் எவருடன் சேர்ந்து நாடகமாடினாலும் அதைப் புரிந்துகொள்கிற அறிவு தமிழ்நாட்டில் இருக்கும் ராமசாமிக்கும், குப்புசாமிக்கும் இருக்கிறது. அவ்வளவு சுலபத்தில் எதையும் மறக்கடிக்க முடியாது. எப்போது வட மாநிலத்தவர் பிரச்சனை வந்தாலும், இப்போது நடந்த இந்த விஷயங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். திமுக பேச்சாளர்கள் மேடையில் பேசிய விஷயங்களுக்காக திமுக தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர் பாஜக தலைவர்கள். ஆனால், வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வேறு எங்கோ நடந்ததை தமிழ்நாட்டில் நடந்தது எனப் பொய் பரப்பிய மாநில நிர்வாகி செய்தது தவறு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாயிலிருந்து வந்ததா?

ஆட்சியை கவிழ்க்கவே முடியாது
பதற்றத்தை தணிப்பதற்காக வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய வதந்திகள் உண்மையில்லை என்ற அறிக்கை விட்ட அண்ணாமலை, திமுக வட மாநிலத்தவருக்கு எதிராகவும், இந்திக்கு எதிராகவும் பேசியதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று ஒரு விஷயத்தைச் சேர்க்கிறார். முன்னர் எப்போதோ நடந்த விஷயங்களைக் கொண்டு வந்து இந்த அறிக்கையில் சேர்க்கும் பாஜகவின் நோக்கம் என்ன? அதற்கு பதிலாகத்தான் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என்று தெரிவித்தார். ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆட்சியைக் கலைத்து ஜனாதிபதியே உத்தரவு போட்டாலும் அடுத்த 10 நாட்களில் இதே ஸ்டாலின் தலைமையில் உச்ச நீதிமன்றத்தால் இந்த அரசு நிறுவப்படும். பீகாரில் லேட்டஸ்ட் உதாரணமே அதற்கு இருக்கிறது.

அண்ணாமலை ஏன் கைது செய்யப்படவில்லை
கேள்வி : அண்ணாமலையே தன்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விடுகிறார்.. அவரை கைது செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம்?
எஸ்பி லட்சுமணன் : எந்த முதிர்ச்சியான தலைவரும் அந்த வார்த்தையைச் சொல்லமாட்டார். என் அறிக்கை சட்டப்பூர்வமாக சரியானது தான், இதை மீறி அதில் உண்மைக்கு மாறான தகவல் அதில் இருப்பதாக நினைத்தால் அதை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று தான் ஒரு தலைவன் சொல்வான். உங்கள் கட்சி எதையும் செய்யும் இடத்தில் இருக்கும் காரணத்தால், அதிகார மமதையில் வரும் வார்த்தை தான் இது. 24 மணி நேரம் கெடு விதிக்கிறேன்.. கைது செய்யுங்கள் என்றெல்லாம் ஒரு தலைவர் பேசுவது அதிகார மமதை, ஆணவத்தின் வெளிப்பாட்டால் வருகிற வார்த்தைகள் தான். இவரை கைது செய்வதன் மூலம் தேவையற்ற விளம்பரத்தைக் கொடுக்க வேண்டாம் என திமுக அரசு நினைத்திருக்கலாம், நீதிமன்றம் அதனை முடிவு செய்யட்டும் எனக் கருதியிருக்கலாம்.












Click it and Unblock the Notifications