நான் வரும்போது தெரு விளக்குகளை அணைத்துவிட்டார்கள்.. திமுக அரசுக்கு மனசாட்சி இல்லை: ஜேபி நட்டா தாக்கு
சென்னை: தான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன என்றும், எமர்ஜென்சி காலம் போல போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதைத்தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் அங்கேயே தொடரும் நிலையில், முன்பு பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்ற முடிவை அறிவிக்காமல் உள்ளன.

பாஜக தரப்பில் இருந்து, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாஜக அணியில் இணைவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜேபி நட்டாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னையில் ஜேபி நட்டா: சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சவுகார்பேட்டையில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், மிண்ட் பகுதியில் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையில் பங்கேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வள்ளலார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மிக மோசமானது. ஆளும் திமுக அரசுக்கு அறிவும் இல்லை. திமுக அரசுக்கு மனசாட்சி இல்லை, ஜனநாயகம் இல்லை. நான் வரும் வழியில் எல்லாம் கடைகள் மூடப்பட்டிருந்தன. திமுகவினர் மிரட்டி கடைகளை மூட வைத்திருக்கிறார்கள்.
நான் இங்கு வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. சென்னையில் இன்றைய தினம் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பது எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால், இது நீண்ட காலம் இருக்கப்போவது இல்லை. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும்.
ஊழலற்ற அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டை திசை திருப்பும் திமுகவின் தலைமையில் இந்த மாநிலம் இருந்து வருகிறது. ஊழல் அரசை அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள். இந்த மண்ணில் யாரெல்லாம் ஊழல் ஆட்சி செய்து வருகிறார்களோ, அவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்துகொண்டு இருக்கிறது.
பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருந்து வருகிறது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது." எனப் பேசியுள்ளார் ஜேபி நட்டா.












Click it and Unblock the Notifications