அதிமுக கொடியை ஓபிஎஸ் யூஸ் செய்தாருன்னு வைங்க! எடப்பாடிக்கு நீதிபதி கூறிய அறிவுரை
சென்னை: அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வம் தரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வம் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நிலை என்ன? என நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஒ.பன்னீர் செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் P.H.அரவிந்த் பாண்டியன், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் எனவும் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயண், தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாமே என தெரிவித்தார். தள்ளிவைப்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என்றார்.
இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தடை உத்தரவை பின்பற்றி வருவதாகவும், மீறப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தடை உத்தரவை நீட்டிக்க மறுத்து, விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, தடை உத்தரவை மீறக் கூடாது என அறிவுறுத்தினார். தடை உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications