ஜெயலலிதா தலையில் மரக்கட்டையால் தாக்கப்பட்டதா? ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சொல்வது என்ன?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலையில் மரக்கட்டையால் தாக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டியது தொடர்பாகவும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விசாரணை நடத்தி தமது முடிவை தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தமது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்திருந்தது. இந்த அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சசிகலா உள்ளிட்ட 8 பேர்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றக் கூடிய ஆஞ்சியோ சிகிச்சையை தர விடாமல் சசிகலா திட்டமிட்டு தடுத்தார் என்கிறது இந்த ஆணைய அறிக்கை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது விசாரணை நடத்தவும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மெல்லக் கொல்லும் விஷம் தரப்பட்டதா?
அத்துடன் ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்டது என மனோஜ் பாண்டியன் புகார் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாகவும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது என்ற புகார் எந்த ஒரு அடிப்படையும் இல்லாததால் தவறானது; ஆதாரமற்றது என நிராகரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலையில் மரக்கட்டையால் அடிக்கப்பட்டதா?
மேலும் ஜெயலலிதாவின் தலையில் மரக்கட்டையால் தாக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாம் ஆணைய விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதாவின் தலையில் எவரோ மரக்கட்டையால் தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார் என முன்னாள் அமைச்சரும் அதிமுக பொறுப்பாளருமான சி.பொன்னையன் கூறினார். இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு. இது ஆணையத்தால் பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால் முதல் விசாரணையில், தனது கூற்று தான் கேட்ட சில வதந்திகளின் அடிப்படையில் இருந்தது என்பதை அவர் தனது குறுக்கு விசாரணையில் ஒப்புக் கொண்டார்.

உடல் ரீதியான வன்முறை அடையாளம் இல்லை
மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலையில் உடல் ரீதியான வன்முறையின் எவ்விதமான அடையாளத்தையும் மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது உடலில் எம்பாமிங் செய்தவர் என்ற முறையில் இது குறித்து டாக்டர் சுதா சேஷையனின் சான்றுகள் இச்சமயத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications