சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு - ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி , இன்று பொறுப்பேற்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், 51வது தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி இன்று பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் பங்கேற்று புதிய தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்தச் சூழலில் தற்போது அவரை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
கடந்த மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அவரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
முனீஷ்வர்நாத் பண்டாரி 1960ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தவர். தனது பி.காம்., எல்.எல்.பி படிப்பை முடித்த முனீஷ்வர்நாத், கடந்த 1983ஆம் ஆண்டு, மே 29ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.
இவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சிவில், சேவை, தொழிலாளர், குற்றவியல், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அரசமைப்பு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். மேலும், இவர் ராஜஸ்தான் அரசின் வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தித்துறையின் வழக்கறிஞராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு நீண்ட நாட்கள் பணியாற்றிய பிறகு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு 2021 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை அங்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
அதன்பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். அப்போது முதல் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு தற்போது அவருக்கு 61 வயது நிரம்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் 62 வயது வரை இருக்க முடியும். ஆகவே இன்னும் 7 மாதங்களுக்கு இவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.