இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது.. சிபிஎம் பாலகிருஷ்ணன் ஓபன் டாக்
சென்னை: தேர்தலின் போது இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது என சிபிஎம் முன்னாள் மாநில செயலர் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், "அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான். மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய எழுச்சி, அரசியல் புரிந்துணர்வு இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது, பாராட்டக்குரியது" என்றார்.
சிபிஎம் முன்னாள் மாநில செயலர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: - இந்த தேர்தலில் கருத்துக்கணிப்புகள் பல சொல்லப்பட்டு இருந்தாலும், மதசார்பற்ற கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். திமுகவுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அதேசமயம் வரும் காலத்தில் திமுக எப்படிப்பட்ட கொள்கையை கடைப்பிடிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறைந்தது 6 இடங்களாவது கொடுங்கள் என்று சொல்லி கேட்டோம். எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக அதனை கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பது தான் உண்மை. ஆனாலும் கூட பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் அளித்துவிட கூடாது என்பதற்காக தான் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். கடைசி வரை பாஜகவை எதிர்க்க நாங்கள் போராட இருக்கிறோம்.
வெற்றி பெறுகின்ற இந்த ஆட்சியில் எப்படிப்பட்ட ஆட்சி அமையப்போகிறது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் இன்றைக்கும் ஒரு கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலவி வந்தாலும், அந்த கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை நீக்க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லும் அவர்கள், அதற்கு அடிப்படை காரணமான தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளிகள், உழைப்பாளிகளுக்கு என்ன கொடுக்கிறது என்பது தான் பெரிய கேள்விக்குறி. வேறு எந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.
வழக்கமாக தேர்தல் நடக்கும் நாளில் இளைஞர்கள் வேறு எங்காவது இருப்பாங்க.. ஆனால் இந்த முறை ஒரு மாற்றம் வேண்டும் என ஒரு அரசியல் புரிதல் ஏற்பட்டு வாக்களிக்க வந்து இருக்கிறார்கள். இப்படி இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் புரிதல் பாராட்டக்குரியது.. வரவேற்கத்தக்கது.." என்று பேசினார்.














Click it and Unblock the Notifications