ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு பாஜகவில் மீண்டும் பொறுப்பு ? வெடிக்குதா சர்ச்சை?
சென்னை: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு பாஜக தலைமை மீண்டும் பொறுப்பு வழங்கியிருப்பதாகவும் இது அக்கட்சியில் புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜகவில் கிடுகிடுவென ஏறுமுகம் கண்டவர் கே.டி.ராகவன். பாஜக சார்பாக டிவி விவாதங்களில் தொடர்ச்சியாக பங்கேற்ற ராகவன், தமிழ்நாடு மாநில தலைவர் பதவிக்கான ரேஸிலும் இடம்பிடித்தார்.

ஆனால் 2021-ம் ஆண்டு கே.டி.ராகவன், சொந்த கட்சியினரே வைத்த பொறி ஒன்றில் சிக்கினார். கே.டி.ராகவன் தொடர்புடைய ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் விலகினார். கடந்த 2 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்தும் கே.டி.ராகவன் விலகி இருந்தார்.
கே.டி.ராகவனுக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது, அவரது வீட்டில் நிகழ்ச்சி நடைபெற்ற போது பாஜக தலைவர்கள் சந்தித்தனர். அதன் பின்னர் பாஜக நிர்வாகிகளை சென்னை புழல் சிறையில் சென்று சந்தித்தார் கேடி ராகவன்.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவில் கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி பொறுப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் சேலம் தொகுதிக்கு கேபி ராமலிங்கம், சிதம்பரம் தொகுதிக்கு எஸ்ஜி சூர்யா, தென்காசி தொகுதிக்கு ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு வானதி சீனிவாசன், நாமக்கல் தொகுதிக்கு விபி துரைசாமி உள்ளிட்டோரும் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்கின்றன அந்த செய்திகள். இதனிடையே ஆபாச வீடியோவில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு பாஜகவில் அதுவும் ஒரு லோக்சபா தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்குவதா? என்கிற அதிருப்தி குரல்கள் இப்போதே வெளிப்படவும் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications