காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமை ஏற்கணும்! பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம் என கி.வீரமணி வேண்டுகோள்!
சென்னை: தனது பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முடிவை மறுபரிசீலனை செய்து பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமை ஏன் முக்கியம் என்பதை விளக்கி அவர் விடுத்த அறிக்கையின் விவரம் வருமாறு;

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியை அறவே அழித்து ஒழித்து விட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. ஆளுமைகள் துடிக்கின்றன. சித்தாந்த அடிப்படையில் இப்போது களத்தில் இந்த அரசியல் யுத்தம் - ஜனநாயகமா? யதேச்சதிகார சர்வாதிகாரமா? என்ற லட்சியங்களின் அடிப்படையில்தான் ஓர் அரசியல் போர் நடைபெற்று வருகிறது!

வெகுமக்கள் ஆதரவு
காங்கிரஸ் பல தேர்தல்களில் தொடர் தோல்விகளைப் பெற்றாலும்கூட, அதன் தொண்டர்கள், வெகுமக்கள் ஆதரவு என்பது இல்லாமல் இல்லை. தேர்தல் தோல்விகள் ஒரு கட்சியின் இன்றியமையாமையை நிர்ணயிப்பதாகாது!''யானை படுத்தாலும் குதிரை மட்டம்'' என்ற பழமொழியை மறக்க முடியாது. படுத்திருக்கும் யானை மக்கள் ஜனநாயகத்தில் எப்போது வேண்டுமானாலும் எழும்.அதற்கு முக்கியம் அதன் கொள்கை, உறுதிமிக்க தலைமை!

புதிய இரத்தம்
அதற்குப் புதிய இரத்தம் - இளமை ரத்தம், கொள்கை லட்சிய ஊசிகள்மூலம் செலுத்தப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில், நாடு போகும் போக்கில் மிக முக்கியமானதாகும். குடும்ப அரசியல்பற்றிப் பேசுவோர் குடும்பத் தியாகத்தைப்பற்றிப் பேசாதது ஏன்? "குடும்ப அரசியல்" என்று குற்றம் சாட்டுவோர், அக்குடும்பம் ஏற்றுள்ள உயிரிழப்புகள், செய்துள்ள தியாகம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். அக்குடும்பத்திற்கு வெறும் அரசியல், பதவி மோகம் என்று மட்டுமே கூப்பாடு போடுவதா?

உட்கட்சி விவகாரம்
இன்றைய அதன் மூத்த தலைவர் சோனியா காந்தி அம்மையாருக்கு பிரதமர் வாய்ப்பு இரண்டு முறை இருந்தும், அவர் மறுத்து, பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் ஆக்கினார் என்பதை ஏனோ மறைத்துப் பேசுகின்றனர்! காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பதவி சுகம் அனுபவித்த இரண்டாம் கட்ட தலைவர்கள் ஜி-23 என்ற பிரிவின்படி வெளியேறி, விமர்சனத்தில் ஈடுபட்டு அடி மரத்தை மறந்து, நுனிக் கிளைகளாகி வருகின்றனர்! அதை ஓர் உட்கட்சி விவகாரம் என்று இன்றைய நிலையில் புறந்தள்ளி விட முடியாது!

ராகுல்காந்தி
எதிரிகளை சரியாக அடையாளம் காண்பவர் ராகுல்காந்தி கொள்கை, லட்சியங்களைத் தெளிவாய்த் தெரிந்து, தனது லட்சிய எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு, பல இளைஞர்கள் கொள்கையாளர்களின் பாராட்டைப் பெறும் திருவாளர் ராகுல் காந்தி - தேர்தல் தோல்வியைக் - கட்சி கண்டது என்பதற்காக ஜனநாயக நெறிப்படி ராஜினாமா செய்து, அவர் மீண்டும் தலைமையேற்க - தொண்டர்கள் தொடர்ந்து வற்புறுத்திடும் நிலையில் மறுதளித்து வருகிறார்.

யாருக்கு இழப்பு?
ராகுல் காந்தி கொள்கை எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு, துணிவுடன் அவர்களை எதிர்ப்பவர் - துடிப்புடன் நாடு முழுவதும் சுற்றி வந்து, மக்களால் அறியப்பட்டவர், இளைஞர்களால் விரும்பப்படுபவர். அவர் நேரு குடும்பத்திலிருந்து வருகிறார் என்பதை 'வாரிசு அரசியல்' என்று லேபிள் இட்டுத் தள்ளினால், யாருக்கு அதனால் இழப்பு? நாட்டை வெறும் ஒரு மத, ஒரு மொழி, ஒற்றை அரசுள்ள நாடாக மாற்றும் தீவிர முயற்சி தோல்வியடைய, இவரைப் போன்றவர் தலைமை, மூத்த அரசியல் கட்சியான காங்கிரசுக்கு அவசிய தேவையாகும்.

பிடிவாதம் வேண்டாம்
எனவே தொண்டர்கள் உணர்வையும், நாட்டின் அபாயகரமான போக்கையும் உணர்ந்து, அவர் தனது பிடிவாதத்தினை விட்டு, தலைவராக இசையவேண்டும். அது அவருக்காகவோ, காங்கிரசுக்காகவோ அல்ல! இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டப்படியான மதச்சார்பற்ற, சமதர்ம ஜனநாயகக் குடியரசை காப்பாற்றிடவே!மற்ற கட்சிகளுடன் ஒருங்கிணைந்து சென்று, 2024 இல் களத்தில் நிற்க கட்சியை மீண்டும் மறுகட்டமைப்பை உருவாக்குங்கள்.

பொறுப்பை தட்டி கழிக்காதீர்
பொறுப்பைத் தட்டிக் கழிக்க வேண்டாம் ராகுல், "யார் ஜனநாயகத்தின் பொது எதிரி, எப்படி நாட்டைக் காப்பாற்ற முடியும்?" என்பதை மட்டும் முன்னிறுத்தி, சிந்திக்க வேண்டும். செயல்பட முனைதல் அவசரம். கொள்கை வீரர் ராகுல் காந்தி, தனது முடிவை மறுபரிசீலனை செய்து, பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், களமாடக் கடமையாற்ற முன்வருதல் அவசியம்'' என்பது அக்கட்சிக்கு அப்பாற்பட்டும் உள்ள கொள்கையாளர்களின் உறுதியான கருத்து.












Click it and Unblock the Notifications