பாலியல் தொல்லை கொடுக்கல.. கலாஷேத்ரா மாணவிகளிடம் சகஜமாக தான் பழகினேன்! கைதான ஹரிபத்மன் வாக்குமூலம்
சென்னை: சென்னை கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பான புகாரில் தலைமைறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரிபத்மனை இன்று தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் அவர் போலீசில் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட நிலையில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
மேலும் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது உதவி பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கூறினர். இருப்பினும் எழுத்துப்பூர்வமாக யாரும் போலீசில் புகார் அளிக்காத நிலை நீடித்தது. இதனால் நடவடிக்கை எடுப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு இருந்தது.

ஹரி பத்மன் மீது வழக்கு
இந்நிலையில் தான் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் கல்லூரியில் இருந்து பாதியில் வெளியேறியதாக குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதிகாலையில் அதிரடி கைது
இதுபற்றி அறிந்த ஹரிபத்மன் தலைமறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை மாதவரத்தில் உள்ள பெண் தோழி வீட்டில் பதுங்கிய ஹரிபத்மனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

போலீசில் வாக்குமூலம்
இதையடுத்து ஹரிபத்மனை எம்ஜிஆர் நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஹரிபத்மன் தன் மீதான புகார் மற்றும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அதாவது தன் மீதான புகார்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாணவிகளிடம் சகஜமாக தான் பேசி பழகினேன். ஆனால் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துப்பூர்வமாக பதிவு
என் மீது புகார் கொடுத்த முன்னாள் மாணவி வேறு பிரச்சனையால் கலாஷேத்ராவில் இருந்து வெளியேறினார். இப்போது என் மீது பொய் புகார் வழங்கப்பட்டுள்ளது என கூறினார். இதையடுத்து தற்போது அவர் கூறிய விஷயங்களை எழுத்துப்பூர்வமாக போலீசார் பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். இதற்கிடைய சில விஷயங்கள் பற்றி போலீசாரின் கேள்விக்கு ஹரிபத்மன் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையை தொடர்ந்து இன்று மாலை ஹரிபத்மனை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

மகளிர் ஆணையம் விசாரணை
இதற்கிடையே கலாஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குநரிடம் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications