பாலியல் தொல்லை.. கலாஷேத்ராவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் 3 பேரிடம் தீவிர விசாரணை.. பரபர பின்னணி
சென்னை: சென்னை கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வழக்கில் பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுதொடர்பாக ஹரிபத்மன் உள்பட 4 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்த நிலையில் 2 டிஎஸ்பிக்கள், பெண் காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் குழு கலாஷேத்ரா சென்று விசாரணையை தொடங்கி உள்ளது.
மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கட்டுப்பாட்டில் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.

இதில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட நிலையில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. மேலும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் உதவி பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீசில் முன்னாள் மாணவி ஹரிபத்மன் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து ஹரிபத்மன் தலைமைறைவானார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரிபத்மன், சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் உள்பட 4 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதற்கிடையே தான் தவறு செய்யவில்லை. உள்நோக்கத்தில் தன்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஹரிபத்மன் கூறியுள்ளார். இதற்கிடையே தான் அவர் ஜாமீன்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்மீது நேற்று விசாரணை நடந்த நிலையில் இன்றும் விசாரைண நடைபெற உள்ளது.

மேலும் கலாஷேத்ரா விவகாரத்தில் மாநில மகளிர் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தியது. மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். மேலும் கலாஷேத்ரா நிர்வாகிகளை அழைத்து பல்வேறு கேள்விகள் கேட்டு விபரங்களை பெற்றார். விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட கலாஷேத்ரா விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதாவது மாணவிகள் புகார்கள் குறித்து நிர்வாகம் சரியாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக களமிறங்கி உள்ளது. இதுகுறித்து தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கலாஷேத்ராவில் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ராவில் மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணையை தொடங்கியது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள், பெண் காவல் ஆய்வாளர்கள் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த குழுவினர் இன்று காலை 11 மணிக்கு விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணை சுமார் 2 மணிநேரத்துக்கு மேலாக நடந்து முடிந்தது. இன்று கலாஷேத்ரா கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து அந்த குழுவினர் கேள்விகள் கேட்டு விபரங்களை பெற்றனர். இருப்பினும் கல்லூரியில் மாணவிகளுக்கு தேர்வு நடந்தது. இதனால் இன்று அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. நாளை தேர்வுகள் முழுவதுமாக முடிவடைய உள்ளது. அதன்பிறகு விடுப்பு வழங்கப்படுகிறது. இதனால் மீண்டும் கல்லூரி அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. இதனால் அடுத்த வாரம் மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications