Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி இருந்த காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் காளியம்மாள் அதிமுக சார்பில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சியில் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவர் கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். அவர் விஜயின் தவெகவில் இணைய உள்ளதாகவும், திமுகவில் சேர உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் தான் காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காளியம்மாள் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.
காளியம்மாளுக்கு புதிய பதவி
அதிமுகவை பொறுத்தவரை தற்போது கட்சியில் பெண் பிரமுகர்கள், பேச்சாளர்கள் பிரபலமாக இல்லை. தற்போது காளியம்மாள் சேர்ந்து இருப்பது அதிமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும். மேலும் கருத்துகளை தடையின்றி எளிய மொழியில் பேசும் திறமை காளியம்மாளிடம் உள்ளது. இதனால் அவரை இந்த தேர்தலில் அதிமுக நன்கு பயன்படுத்தி கொள் வாய்ப்புள்ளது. மேலும் கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற கூறப்படுகிறது.
மயிலாடுதுறையில் போட்டி?
இந்நிலையில், தான் அதிமுக சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் காளியம்மாள் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காளியம்மாள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
நாகப்பட்டினத்தின் ஒரு பகுதியாக தான் மயிலாடுதுறை இருந்தது. அதன்பிறகு கடந்த 2020ம் ஆண்டில் தான் மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிந்தது. இருப்பினும் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள் போட்டியிட்டார்.
பின்னணி என்ன?
இந்த தேர்தலில் அவர் சுமார் 1.27 லட்சம் வாக்குகளை (11.7% வாக்குகள்) பெற்றார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் தனித்து களமிறங்கிய நிலையில் காளியம்மாள் இவ்வளவு ஓட்டுகளை பெற்றார். இது மயிலாடுதுறை தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை எடுத்து காட்டுகிறது. இதனால் இந்த முறை காளியம்மாளை மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் களமிறக்கினால் வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார்.
வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை
மேலும் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் கடைசியாக அதிமுக 2016ம் ஆண்டில் வெற்றி பெற்றது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. பாமக சார்பில் அ.பழனிசாமி போட்டியிட்டு 70,900 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் 73,642 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 2,742 தான். இதனால் இந்த முறை காளியம்மாளை மயிலாடுதுறையில் இறக்கினால் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications