கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. திரிக்கப்பட்ட போஸ்ட் மார்டம்.. குற்றம்சாட்டிய பெற்றோர் தரப்பு
சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் உடலுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளது என மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினர்.
சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து நேற்று காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதி
இதையடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு, மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டுமென நேற்று முறையீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மாணவியின் தந்தை வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு நகலை தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.

நீதிமன்றம்
அதை முழுமையாக படித்துப் பார்த்த நீதிபதி, நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தடயவியல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற நிபுணரான சாந்தகுமாரிடமும் சில விளக்கங்களை கேட்டு பெற்றுக் கொண்டார்.

இரு முறை வீடியோ பதிவு
அதற்கு விளக்கம் அளித்த சாந்தகுமார், அரசு மருத்துவர்களால் இரண்டு முறையும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, இரு முறையும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாவது முறை உடற்கூராய்வு செய்தபோது, புதிதாக ஏதும் கண்டு பிடிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

பந்தயம்
பின்னர் நீதிபதி, மனுதாரர் தரப்பிடம், மகளை இழந்த பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்வதாகவும், அதேசமயம் நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள், அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதி, மகளின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள் என்று தெரிவித்தார்.

உடற்கூராய்வு
மேலும் மாணவி உடல் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
Recommended Video

பிரேத பரிசோதனை அறிக்கை
இதையடுத்து பெற்றோர் தரப்பு கூறுகையில் எங்கள் மகளுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளது. அதன் மீது எங்களுக்கு அதிருப்தி நிலவுவதாக பெற்றோர் குற்றச்சாட்டினர். இதையடுத்து இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications