கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. "செல்போனை கொடுங்க".. பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த ப்ளஸ் டூ மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் தந்தைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த நாள் முதலாக இப்போது வரை பல்வேறு மர்மங்களும், யூகங்களும் ஸ்ரீமதி மரணத்தை சுற்றி உலவி வருகிறது.
மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என அவரது பெற்றோர் தரப்பிலும், ஊர் மக்கள் தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், வேறு காரணங்களுக்காக மாணவி இறந்திருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
கட்டாய மதமாற்றம் பெரிய பிரச்சனை! நாட்டு பாதுகாப்பிற்கே பாதிப்பை உண்டாக்கும்! உச்ச நீதிமன்றம் கருத்து
சிபிசிஐடி விசாரணை
இதனிடையே, தனது மகள் மரண வழக்கில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீமதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும், பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, புலனாய்வு அமைப்புகள் அளிக்கும் அறிக்கைகளை பெற்று உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
'செல்போனை ஒப்படைக்கவில்லை'
இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை, சீலிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பாக 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
"அவசியம் இல்லை"
இதனிடையே, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்கிற சூழல் இல்லை என்றும், அதை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் தரப்பு விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார். மேலும், மாணவி ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"செல்போனை ஒப்படையுங்கள்"
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "உடற்கூறாய்வு மூலம் ஒருவர் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம். நியாயமான விசாரணையை கேட்கும் மனுதாரர், தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும், செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.