சாத்தான்குளம் சம்பவம்.. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்க முடியாத குற்றம்- கமல்ஹாசன்
சென்னை: சாத்தான்குளம் நகரைச் சேர்ந்த, தந்தை மற்றும் மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) என்பவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர் சாத்தான்குளத்தில் ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்போன் கடையை நடத்திவந்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும், பென்னிக்சுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும், போலீசார் கைது செய்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில், அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிர்ச்சி
இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிகர்கள் ஒன்றிணைந்து, கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கமல்ஹாசன் கண்டனம்
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சரத்குமார் அறிக்கை
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரொனா நோய்த்தொற்று பரவல் சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு
ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் கடந்த 19ம் தேதி பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாகவும், எதிர்த்து கேள்வி எழுப்பிய பென்னிக்ஸை கைது செய்து அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உரிய நீதி
இந்த நிலையில் மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த, மகன் மற்றும் தந்தையின் மரணத்தை குறித்து குடும்பத்தினருக்கும், பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களை போக்குவதுடன், உரிய நீதி வழங்க வேண்டும் என்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். உடல் பரிசோதனையில் குடும்பத்தார் எழுப்பிய குற்றச்சாட்டுகள், உண்மையாக இருந்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நிவாரணம்
மேலும் இருவரை இழந்து தவிக்கின்ற குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன். மீள முடியாத பெரும் துயரில், வேதனையில் இருக்கும் ஜெயராஜ் குடும்பத்தாருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர் சார்ந்த கிராமத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications