சாதிப் பிணி ஒழிய.. நம் குரல்கள் ஒன்றுபட வேண்டும்.. ஆத்துப்பாக்கம் சம்பவம் குறித்து கமல்
சென்னை: ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்து தலைவருக்கு நேர்ந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.

சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெரிக்கப்படுவது தொடரும்.
தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.
கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், தலைமை செயலகம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் கொடியேற்றினர்.

அது போல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திலும் சுதந்திர தின ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு கொடியை ஏற்ற ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் சென்றார். அப்போது அவரை கொடியேற்ற விடாமல் ஊராட்சி மன்றச் செயலாளர் உள்ளிட்டோர் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தான் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்துவதாக அமிர்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications