நாங்களா கேட்கறதை விட ரஜினியே எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்- கமல் நம்பிக்கை
சென்னை: ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவராகவே எங்களுக்கு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
கமல் கையில் டார்ச் லைட்.. மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்தது புதிய சின்னம்!
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதனால் அது நிச்சயம் வெல்லும் கூட்டணியாகவே இருக்கும்.
மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும். இதுவரை பெற்ற விருப்ப மனுக்கள் மீது நாளை முதல் மார்ச் 15 வரை நேர்காணல் நடத்தப்படும்.
ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கூறியுள்ள ரஜினிகாந்த், தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்போருக்கு வாக்களியுங்கள் என்றும் கூறியுள்ளார்.