சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்
சென்னை: சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலினை கமல்ஹாசன் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
சென்னையில் ஆர் ஏ புரத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி.
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் அதை படிக்கலாம். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள்.
நாட்டை வழி நடத்தும்
அரசியலுக்கு வருவதற்கு வழி என்பது ஒன்றுமில்லை. யாரும் அரசியலை நீக்கிவிட்டும் வாழ முடியாது. முதல்வர் என்பவர் உங்கள் நாட்டை வழிநடத்தும் ஒரு அலுவலர் மட்டுமே.
முக்கியம்
நான் சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன். அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தான் வருவேன். தமிழன் என்பது தகுதி அல்ல. அது ஒரு விலாசம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம் என்றார் கமல்ஹாசன்.
விமர்சனம்
கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சினையில் தனது சட்டை கிழிந்து விட்டதாக ஸ்டாலின் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த சட்டையுடனே அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவையும் சந்தித்து மனு அளித்திருந்தார். இதைதான் தற்போது கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
பதிலடி
கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளிக்கையில் திமுக ஒரு ஊழல் பொதி மூட்டை. அவற்றை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு முரசொலியில் தலையங்கம் தீட்டி தக்க பதிலடியும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.