"கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது. இது விஜய்க்கும் பொருந்தும்.. எனக்கும் பொருந்தும்”: சொல்வது கமல்ஹாசன்
சென்னை: "கூடும் கூட்டம் எல்லம் ஓட்டாக மாறாது. அது விஜய்க்கு மட்டுமல்ல நான் உட்பட எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள்" என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2 மாநில அளவிலான மாநாடுகளை நடத்தி உள்ளார். இந்த மாநாடுகளுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர். மேலும், தற்போது மாவட்டந்தோறும் பிரச்சார பயணத்தையும் தொடங்கி உள்ளார் விஜய். விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அதிகளவில் திரள்கிறது.

விஜய்க்கு கூடும் கூட்டம்
இந்தக் கூட்டம் விஜய்க்கு தேர்தல் களத்தில் வாக்குகளாக மாறுமா என்ற பெரும் விவாதம் அரசியல் அரங்கில் நடந்து வருகிறது. விஜய்க்கு கூடுவது ரசிகர்கள் கூட்டம், அதெல்லாம் ஓட்டுகளாக மாறாது என திமுக, அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருவாரூரில் மக்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், "இது சும்மா கூடும் கூட்டம், ஓட்டாக மாறாது என்கிறார்களே. இது சும்மா கூடிய கூட்டமா? இல்லை ஓட்டு போடும் கூட்டமா?' என மக்களிடமே கேட்டார். அப்போது அங்கிருந்தவர்கள், "ஓட்டு போடும் கூட்டம்" என குரல் எழுப்பினர். அதன் பின்னர், தான் தோளில் போட்டிருந்த பச்சைத் துண்டை, கடைசியாக தலையில் கட்டிக்கொண்ட விஜய், அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
கமல்ஹாசன் பேட்டி
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்கள் நீதி மய்யம் சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கியதன் விளைவுதான் இன்றைய சந்திப்பு. எங்களுக்கு இறுதி நாள் என்று எதுவும் கிடையாது. நாங்கள் இல்லாத நாள் தான் இறுதி நாள். கட்சியினருடன் ஆலோசித்து வருகிறோம்.
திமுக கூட்டணி வலுவாக இல்லை என்றால் நான் ஏன் சேரப்போகிறேன்? திமுக தலைமை எங்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். எங்கள் தகுதியை நிரூபித்துக் கொண்டு திமுகவிடம் தொகுதி கேட்பதுதான் நியாயமாக இருக்கும். 75 வருட கட்சியிடம் நாம் எல்லா உரிமையையும் தட்டிக்கேட்க முடியது. ஆனால், அவர்களின் செயல்பாடுகளில் தவறு இருந்தால் தட்டிக் கேட்கும் உரிமையை அவர்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டம் ஓட்டாக மாறாது - கமல்
மேலும் விஜய்க்கு முன்னோடியாக அரசியலுக்கு வந்த நீங்கள் கூட்டம் கூடுவது ஓட்டாக மாறாது என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், "என் கட்சிக்காரர்கள் என்னை ஏன் நாடி வந்தார்கள் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறாது. அது விஜய்க்கு மட்டுமல்ல நான் உட்பட எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். கூட்டம் சேர்ந்துவிட்டால் மட்டும் அது ஓட்டாக மாறாது." என்றார்.
விஜய்க்கு கமல் அட்வைஸ்
தவெக தலைவர் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வது என்றால் என்ன சொல்வீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள். இதுதான் நான் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் வைக்கும் வேண்டுகோள். நான் வெறும் குடிமகனாக மட்டும் இருந்தாலும் இதைத்தான் சொல்வேன்" என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications