“அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா?” விஜய் பேச்சுக்கு கமல்ஹாசன் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: "அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா?" என தவெக தலைவர் விஜய் இன்று மாநாட்டில் பேசியது குறித்த கேள்விக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
இன்று மதுரையில் நடைபெற்ற தவெகவின் இரண்டாவது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி நான் அரசியலுக்கு வரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம்பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

அரசியலுக்கு வருவேன் எனக் கூறிவிட்டு வராமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த்தையும், வயதான பிறகு கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்த நடிகர் கமல்ஹாசனையும் குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் இவ்வாறு பேசினாரா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மநீம தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், "அவர் என் பெயரை சொன்னாரா? அல்லது வேறு யார் பெயரையாவது சொன்னாரா? அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா? அவர் எனக்குத் தம்பி" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications